கூண்டுக்கிளியான சசிகலா... ஒரு வருஷம் போச்சு, இன்னும் 3 வருஷம் இருக்கே!
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா எப்படியோ ஓராண்டை நிறைவு செய்துவிட்டார். ஆனால் அவர் போட்ட சபதம் தான் அப்படியே இருக்கிறது.
Recommended Video
சென்னை : சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று சிறை சென்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் ஓராண்டை நிறவ செய்துள்ளனர். கட்சியை காப்பேன் என்று அவர் போட்ட சபதம் போல அவர் ஜாமினில் வெளிவருவார் என்ற எண்ணமும் நிறைவேறவே இல்லை.
ஜெயலலிதா முதல்வராக இருந்த 1991 முதல் 1996 வரையிலான காலத்தில் வருமானத்திறகு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14ல் உச்சநீதிமன்றம் சசிகலா உள்ளிட்ட 3 பேரின் தண்டனையை உறுதி செய்தது. முக்கிய குற்றவாளியான ஜெயலலிதா உயிரிழந்ததால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வருவது தெரிந்து கூவத்தூரில் அடைத்து வைத்திருந்த எம்எல்ஏக்களுடன் இரவு முழுவதும் கதை சொல்லி தனது ஆதரவாளர்களாகவே வைத்திருந்தார் சசிகலா. ஆனால் அவரது முதல்வர் கனவுக்கு செக் வைத்தது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு.
சசியின் சபதம்
4 ஆண்டு சிறைத் தண்டனை உறுதியானதால் வேறு வழியின்றி பெங்களூர் சிறைக்கு சென்றார். சிறை செல்லும் முன்னர் கடந்த பிப்ரவரி 15ம் தேதி காலையில் ஜெயலலிதா சமாதிக்கு சென்று கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றுவேன் என்று எதிர்த்து நின்ற ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக சபதம் போட்டதோடு சமாதி மீது 3 முறை அடித்து சத்தியம் செய்தார். அதோடு ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் வீட்டிற்கு வந்து தியானம் செய்த கையோடு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றார்.
பிப்ரவரி15, 2017ல் சிறை சென்ற சசி
காரிலேயே சென்ற சசிகலாவிற்கு வழி நெடுகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதோடு மாலை 5 மணியளவில் சிறையில் அடைக்கப்பட்டவர், அதன் பிறகு தனது கணவரை பார்க்க பரோலில் வந்தார்.
ஷாப்பிங் செல்லும் காட்சிகள்
இந்த இடைப்பட்ட காலத்தில் தான் சசிகலா, இளவரசியுடன் வெளியில் ஷாப்பிங் சென்றுவிட்டு வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதற்கு ஏற்றாற் போல சசிகலா சிறையில் சகல வசதிகளுடன் தனி சமையல் அறை வைத்து வசதியாக இருக்கிறார் என்று சிறைத்துறை அதிகாரியாக இருந்த ரூபா குற்றம்சாட்டினார்.
சொகுசாக இருந்த சசி
அதிக லஞ்சம் கொடுத்து சசிகலாவிற்கு இந்த வசதிகளை செய்து கொடுத்தது விவேக் என்றும், அடிக்கடி சசிகலா பரப்பன சிறைக்கு அருகில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கிவிட்டு செல்வதாகவும் கூட செய்திகள் கிளம்பின. சிறையில் சசிகலாவிற்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகள் குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்து அறிக்கையும் அரசிடம் அளிக்கப்பட்டு விட்டது. ஆனால் அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
5 நாள் பரோல்
கணவர் நடராஜனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் அவரை பார்த்துக் கொள்வதற்காக கடுமையான நிபந்தனைகளுடன் 5 நாள் பரோலில் அக்டோபர் 6ம் தேதி வெளிவந்தார் சசிகலா. மருத்துவமனைக்கு போய் கணவரை பார்த்துக் கொண்டது என்னவோ சில மணி நேரங்கள் தான், மற்ற நேரங்கள் அனைத்தும் கட்சியை மீட்பதற்கான பேச்சுவார்த்தையிலேயே தீவிரமாக இருந்தார்.
ஒரு வருஷம் ஓடிடுச்சு
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா இறந்த ஓராண்டு நிறைவு முதல் ஒரு மாதம் மவுன விரதம் இருந்தவர் கடந்த வாரத்தில் அதனை முடித்துக்கொண்டுள்ளார். கூண்டுக்கிளியாகன சசிகலா சிறையில் 365 நாட்களை கடந்து விட்டார் ஆனால் இன்னும் அவர் 1,095 நாட்களை கழிக்க வேண்டியுள்ளது.