பிக்பாஸ்.... மனநோயாளிகள் டாஸ்க்... கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் நடித்ததற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் நடித்ததற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடன இயக்குநர் காயத்ரி நடிகை ஓவியாவை பார்த்து சேரி பிஹேவியர் எனக் கூறினார்.
இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நடிகர் கஞ்சா கருப்பு நடிகர் பரணியை அடிக்க பாய்ந்தார்.
நெருடலை ஏற்படுத்தும் பிக்பாஸ்
காயத்ரி அவ்வப்போது தரக்குறைவான வார்த்தைகளால் சக போட்டியாளர்களை திட்டி வருகின்றார். இதைத்தவிர் ரொமான்ஸ் என்ற பெயரில் ஓவியாவையும் ஆரவையும் நெருங்கவிட்டு காட்டும் காட்சிகள் நெருடலை ஏற்படுத்துவதாக உள்ளது.
தடை செய்ய கோரிக்கை
ஜூலி, சினேகன் உள்ளிட்டோர் சக போட்டியாளர்களை அவ்வப்போது கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதும் பார்வையாளர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இந்த நிகழ்ச்சியை தடை செய்யக்கொரி போலீஸில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக போட்டியாளர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் நடிக்குமாறு உத்தரவிட்டார் பிக்பாஸ். இதனால் பச்சை உடையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கிண்டல் செய்வது போல் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் சுற்றி திரிந்தனர்.
சமூக ஆர்வலர்கள்
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அவமதிப்போது போல் பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்தது. இதற்கு சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆபாசமானது, அருவெறுப்பானது
பேராசிரியர் சிவபாலன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
பிக் பாஸில் கடந்த 2 நாட்களாக நேற்று மனநலம் பாதித்தவர்கள் என நடத்திய நாடகம் ஆபாசமானது, அருவெறுப்பானது என்று சமூக ஆர்வலர்கள் பதிவிட்டுள்ளனர்.
மன நோயாளிகள் மீது, இந்த சமூகம் ஏற்படுத்தியிருக்கும் பிம்பம் நிச்சயம் வன்மமானது. தங்கள் மனதில் இருக்கும் குரூரத்தையும், பரிகாசத்தையும், கேலியையும் எந்த வித குறைந்தபட்ச குற்ற உணர்ச்சியும் இன்றி அவர்கள் மீது இந்த சமூகம் திணித்து கொண்டிருக்கின்றது.
பொது தளத்தில் மனநலம் குறித்தும், அதன் நோய்கள் குறித்தும் ஏராளமான உரையாடல்கள் சமீபத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.மன நோயாளிகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற பொதுபுத்தி எத்தனை தவறானது என்பதை உணர்த்த ஏராளமான தன்னார்வலர்கள் நீண்ட காலமாக முயற்சித்து வருகிறார்கள்.
ஆனால் இது போன்ற பொறுப்பற்ற ஊடகங்கள் (சினிமா, சீரியல்களையும் சேர்த்து) இந்த முயற்சியை திரும்பவும் தொடங்கிய இடத்திலேயே கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றன.
அன்புள்ள பிக் பாஸ்,பச்சை உடை அணியாமல், நீங்களும், உங்கள் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களும் இத்தனை நாள் நடத்திய கூத்து தான் உங்கள் அனைவரின் மனப்பிறழ்வுக்கான அறிகுறி.பச்சை உடை அணிந்து நீங்கள் நேற்று செய்தது அனைத்தும் ஒரு ஆபாச நடனத்தின் அருவருப்பான உடலசைவுகள் மட்டுமே.
இவ்வாறு பேராசிரியர் சிவபாலன் பதிவிட்டுள்ளார்.