ஏடிஎம் சேவைக்கு வசூல்: வங்கிகளை வழிக்கு கொண்டு வர வாட்ஸ்அப்பில் பரவும் ஐடியா
சென்னை: ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க கட்டணம் விதித்த வங்கிகளை வழிக்கு கொண்டுவர என்ன செய்யலாம் என்ற ஐடியாவுடன் வாட்ஸ்-அப்பில் மெசேஜ் ஒன்று தீயாய் பரவி வருகிறது.
கணக்கு வைத்துள்ள ஏடிஎம் மையங்களில் மாதத்துக்கு ஐந்து முறை பணம் எடுத்துக்கொள்ளலாம்; அதற்கு மேல் எடுக்கும் ஒவ்வொரு முறைக்கும் தலா ரூ.20 கட்டணமாக பிடித்தம் செய்யப்படும் என்ற நடைமுறை இம்மாதம் 1ம்தேதி முதல் சென்னை, பெங்களூர் உட்பட ஆறு பெருநகரங்களில் அமலுக்கு வந்துள்ளது. பணம் எடுப்பது மட்டுமின்றி பண இருப்பை சோதித்து பார்க்க ஏ.டி.எம் மையத்திற்குள் சென்றாலும் இந்த விதிமுறை பொருந்தும் என்பது கூடுதல் அதிர்ச்சியாகும். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
பிற வங்கிகளின் ஏ.டி.எம் மையங்களையும் கட்டணமின்றி மாதம் 3 முறைதான் பயன்படுத்தமுடியும். இதனால் ஏ.டி.எம் மையங்களை பயன்படுத்தும் கோடிக்கணக்கான நடுத்தர வர்க்கத்து வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ.20 என்பது நடுத்தர குடும்பங்களுக்கு முக்கியமான ஒரு தொகையாகவே உள்ளது.
இந்நிலையில், வங்கிகளை பழையபடி வழிக்கு கொண்டுவர வேண்டுமானால் வங்கிகளுக்கே சென்று பணத்தை எடுக்குமாறு வாட்ஸ்-அப்பில் ஒரு, வாய்ஸ் மெசேஜ், தீயாய் பரவி வருகிறது.
அந்த மெசேஜில் "அனைத்து பகுதிகளிலும் வங்கிகளை திறக்க முடியாது என்பதால்தான் ஏடிஎம் மையங்களை வங்கிகள் திறந்தன. இப்போது நம்மிடமிருந்தே பணத்தை பறிக்கும் செயலிலும் வங்கிகள் இறங்கியுள்ளன. இதற்கு பதிலடியாக, நாம் வங்கிகளுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்.
வங்கி கணக்கு வைத்திருக்கும் நண்பர்கள் குரூப்பாக வங்கிக்கு சென்று, ஆளுக்கு ரூ.100 மட்டும் சலானை நிரப்பி எடுக்க வேண்டும். இப்படி நண்பர்கள் ஐந்து பேர், பத்து பேர் என தினமும்போய் பணத்தை எடுக்க வேண்டும். ஊருக்கு ஊர் இதேபோல செய்ய வேண்டும். அப்படி பணம் எடுப்பதில் எந்த தவறும் கிடையாது. ஏன் இப்படி குறைந்த பணத்தை எடுக்கிறீர்கள் என்று கேட்டால், இப்படி ஏ.டி.எம்மில் எடுத்து எங்களுக்கு பழக்கம் என்று கூறிவிடுங்கள்.
இவ்வாறு நாம் பணம் எடுக்க சென்று தொல்லை தந்தால், வங்கி ஊழியர்கள் அதை மேலிடத்துக்கு எடுத்துச் சொல்வார்கள். ஒரே மாதத்தில் புதிய நடைமுறையை வங்கிகள் திரும்ப பெறும்" இவ்வாறு அந்த வாய்ஸ் மெசேஜில் ஒரு நபர் பேசுகிறார். இந்த மெசேஜ் வாட்ஸ்-அப் குரூப்புகளில் வேகமாக பரவி வருகிறது.