திருவள்ளூரில் தீண்டாமை சுவர்..ஆட்சியர் அதிரடி உத்தரவு..7 ஆண்டுகளாக தவித்த மக்களுக்கு விடிவு காலம்
திருவள்ளூர்: தோக்கமூரில் பட்டியலின மக்களை பாதிக்கும் வகையில் எழுப்பப்பட்டிருந்த தீண்டாமை சுவரை இடித்து அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், இன்று அதிகாலை தீண்டாமை சுவர் இடித்து அகற்றப்பட்டது. பதற்றத்தை தணிக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், தோக்கமூர் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட பட்டியலின் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு திரௌபதி அம்மன் கோயில் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் மதில் சுவர் ஒன்று கட்டப்பட்டது.
இதனால், பட்டியலின மக்கள் கால்நடை மேய்ச்சல் மற்றும் கூலி தொழிலுக்கு அந்த வழியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த சுவர் பட்டியலின மக்களைப் பாதிக்கும் வகையில் எழுப்பப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.
திண்பண்ட தீண்டாமை.. “கிரிக்கெட்” முதல் “அக்னிபாத்” வரை! “அசுரன்” படத்தை மிஞ்சும் “சாதிவெறி” பின்னணி
தீண்டாமை சுவரை இடிக்க கோரிக்கை
தோக்கமூர் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கூலி தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். பட்டியலின மக்களை பாதிக்கும் வகையில் எழுப்பப்பட்டுள்ள தீண்டாமை சுவரை இடித்து அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்களும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.பொன்னேரி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகங்களில் பல கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இடித்து தள்ளப்பட்ட சுவர்
தீண்டாமை சுவரை அகற்ற மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று அதிகாலை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கண்ணன் தலைமையில், சுமார் 150க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் 5 ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் அந்த மதில் சுவர் அகற்றப்பட்டது. ஆனால் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முள்வேலியை அதிகாரிகள் அகற்றவில்லை. அந்த முள்வேலியையும் அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சற்று நேரம் சலசலப்பு நிலவியது.
முள்வேலி அகற்றப்படுமா
பல ஆண்டு போராட்டத்தின் காரணமாக தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டாலும் முன்வேலியை அகற்றினால் மட்டுமே மக்கள் நடமாட முடியும் என்றும் பட்டியலின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுவரை இடித்து தள்ளியவர்கள் முள்வேலியை அகற்ற முன் வர வேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோளாகும்.
போராட்ட அறிவிப்பு
இந்த நிலையில் வீடுகளை சுற்றி 8 அடி உயரமும் 90 மீட்டர் நீளமும் கொண்ட சுற்று சுவரை ஒட்டிய இடத்தில் சிமெண்ட் கற்களால் ஆன முள்வேலியை கோயில் நிர்வாக தரப்பினர் அமைத்தனர். அந்த இடத்தை பயன்படுத்திய நபர்கள் சுவர் மற்றும் முள்வேலியை உடனடியாக அகற்றுமாறு அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை தாமதமானதால் இந்த விவகாரத்தை பல சமூக அமைப்புகளும் சாதிய அமைப்புகளும் கையில் எடுத்தாலும் பிரச்னைக்கு உரிய முள் வேலி மற்றும் தீண்டாமை சுவரை அகற்ற வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு அக்டோபர் 5ம் தேதிக்குள் தீண்டாமை சுவர் அகற்றப்படாவிட்டால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாக அறிக்கை வெளியிட்டனர். இதனையடுத்து தீண்டாமை சுவர் இடித்து தள்ளப்பட்டுள்ளது.