திருவண்ணாமலை: பயிர்கடனை தள்ளுபடி செய்ய ரூ. 25 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி மீது வழக்குப்பதிவு
பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதற்கு விவசாயிகளிடம் லஞ்சம் கேட்டுள்ளார் ஒரு அதிகாரி.
திருவண்ணாமலை: தமிழக அரசு பயிர் கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ள நிலையில் கடனை தள்ளுபடி செய்து ரசீது கொடுக்க ஏழை விவசாயிகளிடம் தலா 5000 வரை லஞ்சம் பெற்றுள்ளார் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அதிகாரி. லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 25 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா, புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில், ரூ.12,110 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதன் மூலம் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணை வெளியிடப்பட்டதோடு பயிர்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீதுகளையும் விவசாயிகளுக்கு அளித்தார் முதல்வர் பழனிச்சாமி. இதனையடுத்து தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு ரசீதுகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதில் ரூ.25 லட்சம் லஞ்சம் பெற்றது தெரியவந்துள்ளது.
தேசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சங்க செயலாளர் அண்ணாதுரை என்பவர் பயிர்கடனை தள்ளுபடி செய்து ரசீது வழங்குவதற்கு விவசாயிகளிடம் தலா 5 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். பணத்தை கொடுக்க முடியாதவர்களுக்கு ரசீது கொடுக்க முடியாது என்று தெரிவித்தாராம் அண்ணாதுரை.
இதனையடுத்து அண்ணாதுரை பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. தேசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திற்கு வந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் 7 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சங்க செயலாளர் அண்ணாதுரை 25 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
சங்க செயலாளர் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணாதுரை மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications