வேலூர் கோட்டையப் பிடிக்க வேட்டையில் குதித்த துரைமுருகன்.. மகனுக்காக மெனக்கெடுகிறார்!
வேலூர்: வேலூரில் வேட்டையை துவங்கி விட்டார் துரைமுருகன். மகனுக்காக வீதிவீதியாக சென்று பிரச்சாரம் செய்யவுள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக திமுக என இரு அணிகளிலும் முக்கியத்தலைவர்களின் வாரிசுகள் களம் இறங்கப் போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் திமுக பொருளாளரும் மூத்த தலைவருமான துரைமுருகனின் மகன் கதிர் வேலூர் தொகுதியில் களம் இறங்கப் போவது உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தனது மகனுக்காக துரைமுருகன் சீட் கேட்டிருந்தார். ஆனால் கடந்த முறை வேலூர் தொகுதி திமுக கூட்டணியில் முஸ்லிம் யூனியன் லீகிற்கு ஒதுக்கப்பட்டது. இதனால் துரைமுருகன் வருத்தத்தில் இருந்தார். கடந்த முறை இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செங்குட்டுவன் 387719 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட A.C. சண்முகம் 324326 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தையும் ஏற்கனவே அந்த தொகுதியின் சிட்டிங் எம்.பியாக இருந்த திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அப்துல் ரஹ்மான் 205896 வாக்குகளை பெற்று 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு சீட்.. போன முறை தாமரை.. இந்த முறை உதயசூரியன்!
திமுக மீது புகார்
கடந்த தேர்தலில் திமுக கூட்டணி 3 -வது இடத்திற்கு தள்ளப்பட்டதற்கு பல காரணங்கள் இருந்தாலும் வேலூர் திமுகவினர் இந்த தொகுதி தங்களுக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்து அது கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்ததாலும் இங்கு முஸ்லிம் யூனியன் லீக் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது என்று தேர்தல் முடிவுகள் வந்தபோது பேசப்பட்டது.
கதிர் ஆனந்த்
இந்த நிலையில் இம்முறை வேலூரில் திமுக போட்டியிடுவது உறுதியாகிவிட்டதாகவும் அந்த சீட் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிருக்கு வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை உறுதிபடுத்தும் விதத்தில் திமுக பொருளாளர் தற்போது அடிக்கடி இங்கு விஜயம் செய்கிறார். வேலூர் துரைமுருகனின் சொந்த மாவட்டம்தான் ஆனால் இதுவரை இவர் இங்கு வரும்போதெல்லாம் கட்சியினரும் முக்கியப் பிரமுகர்களும் அவரை சென்றுதான் சந்தித்துவிட்டு வருவார்கள்.
தேடிப் போய் பார்க்கிறார்
ஆனால் துரைமுருகன் இப்போது வேலூருக்கு வரும்போதெல்லாம் தனது நண்பர்கள், தொழிலதிபர்கள், முக்கியப் பிரமுகர்கள் என்று துரைமுருகன் நேரில் சென்று சந்தித்து தனது மகனுக்கு ஆதரவை திரட்டி வருகிறார். கடந்த வாரம் வேலூருக்கு சென்ற துரைமுருகன் அங்குள்ள முஸ்லிம் யூனியன் லீக் நிர்வாகிகளை வீட்டுக்கே சென்று சந்தித்து தனது மகனுக்கு ஆதரவு கோரியுள்ளார். திமுக நிர்வாகிகள் பலரையும் சந்தித்த அவர் தேர்தல் வியுகங்கள் குறித்தும் ஆலோசித்து வருகிறாராம். அதோடு திமுகவின் ஊராட்சி சபை கூட்டங்களிலும் கலந்து கொள்ளும் அவர் அங்குள்ள முக்கியப் பிரமுகர்கள் பலரையும் சந்தித்து தனது மகன் கதிருக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
ஏசிஎஸ் களம் இறங்கினால்
கடந்த முறை பாஜக கூட்டணியில் இந்த தொகுதியில் களம் கண்ட புதிய நீதிக்கட்சி A.C. சண்முகம் 324326 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றிருந்தார். அவரது நிலை இப்போது என்னவென்று தெரியவில்லை. அவர் அதிமுக கூட்டணியில் தொடர்கிறாரா அவரை பாஜக தக்கவைத்துக் கொள்ளுமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. ஒருவேளை அவரே இங்கு மீண்டும் போட்டியிடும் சூழலில் கடுமையான போட்டி இங்கு தவிர்க்க முடியாததாகிவிடும்.
காத்திருக்கும் கடும் போட்டி
கடந்த முறை அதிமுக வேட்பாளரை விட குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே இவர் இங்கு தோல்வியை தழுவினார். அப்போது பாஜக கூட்டணியில் பெரிய கட்சி என்று கூறுவதாக இருந்தால் பாமகவை கூறலாம். அவர்களுக்கு இங்கு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உள்ளது. இம்முறை அதிமுக, பாமக, பாஜக எல்லாம் ஓரணியில் இருப்பதால் திமுக சார்பில் துரைமுருகனின் மகன் போட்டியிட்டாலும் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை