ஜெயிலில் தொடரும் நளினி, முருகனின் உண்ணாவிரதம்.. உடல் சோர்வு.. மருத்துவர்கள் கண்காணிப்பு
நளினி, முருகன் இருவரும் உண்ணாவிரத போராட்டத்தை இன்றும் நடத்தி வருகிறார்கள்.
வேலூர்: தங்களை விடுதலை செய்யும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று முருகனும், நளினியும் ஜெயிலில் தீர்க்கமாக தெரிவித்து இன்றும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதனால் இருவரும் உடல்சோர்வுடன் காணப்படுகின்றனர்.
ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்துவரும் 7 பேர் விடுதலை குறித்த விவகாரத்தில் ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
எனவே கடந்த 5 மாதங்களாக காலந்தாழ்த்தி வருவதாலும், தங்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நளினி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலாலுக்கும் நளினி கடிதம் எழுதியதுடன், இந்த முறை உண்ணாவிரதத்தை கைவிடப்போவது கிடையாது" என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
இன்று 5-வது நாள்
இன்று நளினி 5-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதே கோரிக்கையை வலியுறுத்தி முருகன் இன்று 7-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இரண்டு பேருமே சாப்பாடு கொடுத்தாலும் சாப்பிட மறுத்துவிட்டனர்.
சந்திப்பு இல்லை
அதேபோல, ஜெயிலில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, உள்ளிட்ட பொருட்களையும் இருவருமே வாங்க மறுத்துவிட்டனர். சிறை விதிகளின்படி, தொடர்ந்து சிறையில் சாப்பிடாமல் இருந்தால், அவர்களுக்கு சிறையில் வழங்கப்படும் சலுகைகள் ரத்தாகிறது என்றும் பார்வையாளர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களது வக்கீலை தவிர வேறு யாரும் சந்திக்க முடியாது என்றும் சிறை நிர்வாகம் கூறியுள்ளது.
சலுகைகள் ரத்து
உண்ணாவிரதப் போராட்டத்தை இருவருமே கைவிட்டால் மட்டுமே மீண்டும் சலுகைகள் வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய முடியும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல உண்ணாவிரதத்தை கைவிடுமாறும் முருகன், நளினியுடன் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
மருத்துவர்கள் கண்காணிப்பு
இதனிடையே தொடர் உண்ணாவிரதம் இருந்து வருவதால், நளினி, முருகன் இருவருமே உடல்சோர்வாக காணப்படுவதாக சிறை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டால், கவனிக்க சிறை வளாகத்திலேயே சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நளினி, முருகன் இருவருமே தங்கள் உண்ணாவிரத போராட்டத்தில் உறுதியாக இருப்பதால் சிறை வளாகம் பரபரப்பாக உள்ளது.