விடாத பிடிவாதம்.. தொடர்ந்து இடையூறு.. பிடனை ஆட்சியமைக்க விடாமல் தடுத்து.. டிரம்ப்பின் அட்டகாசம்..!
விடாத பிடிவாதம்.. தொடர்ந்து இடையூறு.. பிடனை ஆட்சியமைக்க விடாமல் தடுத்து.. டிரம்ப்பின் அட்டகாசம்..!
வாஷிங்டன்: உங்கள் பிடிவாதத்தை விட்டுவிட்டு, அதிபர் பிடனுக்கு வழிவிடுங்கள் என்று டிரம்புக்கு அமெரிக்க மக்கள் கோரிக்கை மேல் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இன்னும் தன்னுடைய தோல்வியை டிரம்ப் ஒப்புக் கொள்ளாமலேயே இருந்து வருகிறார்.. அதேசமயம் அதிபர் பதவியில் அவர் நீடித்தும் வருகிறார்.
இப்போது அடுத்த அதிபராக ஜோ பிடன் பதவி ஏற்க வேண்டும், அதற்கான அதிகார மாற்றத்தை எந்தவித பிரச்சனையும் செய்யாமல், இடையூறுமில்லாமல் நடத்தி தர வேண்டியது டிரம்பின் கடமையாகும்.. அதற்கான நெருக்கடிதான் அவருக்கு அதிகமாகி வருகிறது.
பொது சேவைகள் நிர்வாகம், பிடனை அதிபராக அங்கீகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது... இந்த நிர்வாகம்தான், அதிகார மாற்றத்தை, புதிய அதிபர் பொறுப்பேற்பை நடத்தி தர வேண்டும். ஆனால் இந்த முகமையின், டிரம்ப் ஏற்கனவே நியமித்த நிர்வாகியான எமிலி மர்ஃபி என்பவர் ஜோ பிடன் அதிபராகும் செயல்முறையை இன்னும் ஆரம்பிக்கவே இல்லையாம்.
ராணுவத்தை அனுப்ப திட்டமா?.. பென்டகனில் முக்கிய அதிகாரிகளை நீக்கிய டிரம்ப்.. உள்ளே வந்த விசுவாசிகள்!
அவர் எப்போது அந்த பணியை தொடங்குவார் என்றும் தெரியவில்லை.. அதற்கான வழிகாட்டுதல்களையும் இன்னும் வழங்காமலும் இருக்கிறார். ஒருபக்கம் டிரம்ப் பிடிவாதம் காட்டுகிறார்.. மற்றொரு பக்கம், இந்த அதிகாரி வழிகாட்டுதல்களை தராமல் இழுத்தடித்து கொண்டு வருகிறார்.. அதாவது, பிடனை பதவியேற்க விடாமல் எல்லா பக்கமும் இடையூறு நடந்து வருகிறது.
இதற்கு முன்பு எந்த அதிகாரிகளும் இப்படி இடையூறுகளை தந்தது இல்லை.. தேவையில்லாமல் தாமதம் செய்வது, மக்கள் விரோதமான செயலாக கருதப்படுகிறது.. அதனால்தான் டிரம்ப் மீது அங்கு இன்னும் விமர்சனங்கள் எழுந்தபடியே இருக்கின்றன.
பைடன் ஆதரவாளர் ஜென் சாகி என்பவர் தன்னுடைய ட்விட்டில், "அமெரிக்க மக்களின் எண்ணத்தை பிரதிநிதித்துவம் செய்வதுதான் அமெரிக்க அரசு என்றால், அதிகார மாற்றத்தை இப்படியெல்லாம் இடையூறு செய்யக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.. இதனிடையே சில தலைவர்கள், பிடனை ஆட்சியில் உட்காரவைப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.. தயவுசெய்து பிடனுக்கு வழிவிடுங்கள்.. உங்கள் பிடிவாதத்தை விட்டுவிடுங்கள் என்று டிரம்புக்கு அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.