ஆச்சரியம்.. வானம் முழுக்க திடீரென பச்சை நிறமானது.. பயத்தோடு எட்டிப் பார்த்த மக்கள்.. அரிய நிகழ்வு
வாஷிங்டன்: அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தில் வானம் முழுவதும் திடீரென பச்சை நிறத்தில் மாறியதால் மக்கள் குழம்பிப் போய்விட்டனர்.
Recommended Video
வெப்ப மயமாதல் காரணமாக இந்த உலகம் பல்வேறு பிரச்சினைகள் எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாகப் பருவ நிலை மாற்றம் நாம் சந்திக்கும் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது
கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நிலவும் மிகக் கடுமையான வெப்பம், ஜெர்மனி, சீனா உள்ளிட்ட நாடுகளில் பெய்யும் கனமழை உள்ளிட்டவை முக்கிய பிரச்சினையாக உள்ளது.
அமெரிக்கா
அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களிலும் அடிக்கடி புயல் ஏற்படுவது வழக்கமான ஒரு நிகழ்வு தான். நம்ம ஊரைப் போல இல்லாமல் அங்குப் புயல் அதிபயங்கர வேகத்திலும் கூட வீசும். அப்போது மக்களின் வீடுகள் அப்படியே அடித்துச் சென்றுவிடும். இந்தச் சூழலில் அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தில் செவ்வாயன்று ஒரு சக்திவாய்ந்த புயல் வீசியதால் வானத்தில் அரிய நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
பச்சை
இந்த வாரத் தொடக்கத்தில் புயல்கள் தெற்கு டகோட்டாவை கடந்து சென்றது. இந்தப் புயல் காரணமாக அங்கு கடும் மழை பெய்தது. சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் அதி பயங்கர காற்றும் கூட வீசியது. இந்த கடுமையான வானிலையில் மிகவும் தனித்துவமான விஷயம் என்னவென்றால், இந்த நிகழ்வுக்குப் பின்னர் வானம் திடீரென பச்சை நிறத்தில் மாறிவிட்டது. இது அங்குள்ளவர்களை ஆச்சரியப்படுத்தியது.
கிளம்பிய வதந்தி
கடந்த செவ்வாய்க்கிழமை மதிய நேரங்களில் தெற்கு டகோட்டாவில் பல இடங்களில் பச்சை நிறத்தில் பனி போன்ற அமைப்பு போர்த்தி இருந்தது. கரு மேகங்களால் வானம் இருண்டு இருந்த நிலையில், அதைப் பலரும் படம் பிடித்து ட்விட்டரில் பகிர்ந்து உள்ளனர். வானம் திடீரென இப்படி பச்சை நிறத்தில் மாறியது சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. வழக்கம் போல இதற்கும் ஏலியன் முதல் உலகம் அழிவு வரை பலரும் பல கதைகளைக் கிளப்பிவிட்டனர்.
என்ன காரணம்
இந்தச் சூழலில் இதற்கு அந்நாட்டின் தேசிய வானிலை சேவையின் (NWS) ஆய்வாளர் கோரி மார்ட்டின் விளக்கம் அளித்துள்ளார். அதாவது சூரியன் அஸ்தமனம் ஆகும் சமயத்தில் சூரியனில் இருந்து வரும் சிவப்பு ஒளி புயல் மேகங்களில் இருக்கும் நீர் அல்லது பனித் துகள்கள் உடன் தொடர்பு கொள்ளும்போது இடி மற்றும் மழை ஏற்படுவது உடன் மேகங்களும் பச்சை நிறத்தில் ஒளிரும் என்று கூறினார்.
கடும் மழை
இந்த வகையான புயல்கள் ஆலங்கட்டி மழையால் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். வானம் இப்படி பச்சை நிறத்தில் மாறிய சில மணி நேரத்திலேயே அங்கு அதி தீவிர கனமழை பெய்யத் தொடங்கியது. பல இடங்களில் சுமார் 120 மிமீ மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் சுமார் 30 ஆயிரம் மக்கள் இருளில் மூழ்கும் சூழலுக்கும் தள்ளப்பட்டனர்.
முதல்முறை இல்லை
அதேநேரம் வானம் இதுபோல வித்தியமான நிறங்களில் மாறுவது இது முதல் முறை இல்லை. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம், சஹாரா பாலைவனத்திலிருந்து வீசப்பட்ட தூசி மற்றும் மணல் காரணமாக ஸ்பெயினின் சில பகுதிகள் ஆரஞ்சு நிறத்தில் மாறி இருந்தது. இது ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் உள்ளிட்ட பல பகுதிகளில் மிக மோசமான காற்று மாசையும் ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து அந்நாட்டின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
ஸ்பெயின்
இதனால் அங்குச் சிலருக்கும் மூச்சு திணறும் கூட ஏற்பட்டு இருந்தது. இதன் காரணமாகப் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தி இருந்தது. இது மனிதர்களுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றாலும் கூட, அது சஹாரா பாலைவனத்திலிருந்து ஊட்டச்சத்து நிறைந்த தாதுகளை விவசாய நிலங்களுக்கு எடுத்து வரும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.