நேற்று பெண்கள் சுவர் போராட்டம்.. இன்று சபரிமலை பிரவேசம்.. கேரளாவில் அடுத்தடுத்த நடக்கும் அதிரடி!
நேற்று கேரளாவில் பெண்கள் சேர்ந்து ''பெண்கள் சுவர்'' போராட்டம் நடத்தியதற்கு மறுநாளான இன்று 2 பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் சென்று இருக்கிறார்கள்.
Recommended Video
திருவனந்தபுரம்: நேற்று கேரளாவில் பெண்கள் சேர்ந்து ''பெண்கள் சுவர்'' போராட்டம் நடத்தியதற்கு மறுநாளான இன்று 2 பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் சென்று இருக்கிறார்கள்.
சபரிமலை கோவிலுக்குள் 50 வயதிற்கும் குறைவான இரண்டு பெண்கள் இன்று அதிகாலை நுழைந்து உள்ளனர். இவர்கள் கோவிலில் தரிசனம் செய்தது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
மலப்புரம் பகுதியை சேர்ந்த கனகதுர்கா என்ற 46 வயது பெண் மற்றும் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிந்து என்ற 40 வயது பெண் ஆகியோர் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்துள்ளனர்.
பெரிய போராட்டம்
நேற்றுதான் கேரளாவில் பெண்கள் சுவர் என்ற பெயரில் பெரிய போராட்டம் நடைபெற்றது. மிகப்பெரிய மனிதசங்கிலி போராட்டம் நடந்தது. கேரளாவில் காசர்கோடு தொடங்கி திருவனந்தபுரம் வரை 620 கிமீக்கு பெண்கள் வரிசைகட்டி, கைகோர்த்து மனித சங்கிலியாக நின்றனர். 10 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.
மாநில அரசு ஆதரவு
கேரளா மாநில கம்யூனிஸ்ட் அரசின் அனுமதியின் பெயரில், அவர்களின் முழு ஆதரவில் இந்த போராட்டம் நடந்தது. கேரளா முதல்வர் பினராயி விஜயன் காசர்கோட்டில் நடக்கும் இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்டார். அதேபோல் மாநில அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஏன் செய்தனர்
சபரிமலை பிரச்சனைக்கு மத்தியில் இந்த போராட்டம் நடப்பதால் இது அதிக கவனம் பெற்றது. ஆனால் இதற்கும் சபரிமலைக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அரசு மறுத்தது. இது பெண்களின் சம உரிமைக்கான போராட்டம் என்று கூறப்பட்டது. ஆனாலும் இது சபரிமலை போராட்டத்திற்கான பதிலடிதான் என்று கேரளா முழுக்க பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று சாதனை
இந்த நிலையில்தான் இன்று பெண்கள் 2 பேர் சபரிமலை கோவிலுக்குள் சென்று இருக்கிறார்கள். 50 வயதுக்கும் குறைவான இரண்டு பெண்கள் கோவிலுக்குள் சென்றுள்ளனர். பெண்கள் போராட்டத்திற்கு மறுநாளே இப்படி ஒரு சம்பவம் நடந்து இருப்பது வலதுசாரியினரை பெரிய வருத்தத்திற்கு உள்ளாக்கி உள்ளது.