கமிஷனால் காண்ட்ராக்டர் தற்கொலை... பாஜக அமைச்சர் மீது ஆளுநர் வரை சென்ற புகார்... பரபர கர்நாடகம்
பெங்களூர்: கர்நாடக பாஜக அமைச்சர் ஈசுரவப்பா 40 சதவீதம் கமிஷன் கேட்டதால் தற்கொலை செய்வதாக கூறி காண்ட்ராக்டர் தற்கொலை செய்துள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது. ஈசுவரப்பாவை அமைச்சர் பதவியில் நீக்க வேண்டும் என வலியுறுத்தும் காங்கிரஸ் இன்று கவர்னரை சந்தித்து புகாரளித்தனர். இந்த விவகாரத்தால் ஆளும் பாஜக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். இவரது அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக பாஜக மூத்த தலைவர் ஈசுவரப்பா உள்ளார்.
18 நாளில் 5 வழக்குகள் சிபிஐக்கு மாற்றம்... மேற்கு வங்கத்தில் மம்தா அரசுக்கு சிக்கலா? என்ன நடக்கிறது?
இவர் சர்ச்சைக்கு பெயர் பெற்றவர். அடிக்கடி பல்வேறு விஷயங்களில் சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் தான் தற்போது அவர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது அவரது அமைச்சர் பதவிக்கு உலை வைக்கலாம் என கூறப்படுகிறது. அதன் விபரம் வருமாறு:
காண்ட்ராக்டர் தற்கொலை
பெலகாவி மாவட்டம் இண்டல்காவை சேர்ந்தவர் சந்தோஷ் கே பட்டீல். இவர் அரசு பணிகளை காண்ட்ராக்டர் எடுத்து மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் உடுப்பில் உள்ள தனியார் தங்கும் விடுதி அறையில் அவர் இறந்து கிடந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமான நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீடியோ
முன்னதாக தற்கொலை செய்வதற்கு முன்பு சந்தோஷ் கே பட்டீல் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், ‛‛எனது சாவுக்கு பாஜக அமைச்சர் ஈசுவரப்பா தான் காரணம். ஒப்பந்த அடிப்படையில் பணி செய்த நிலையில் பணம் விடுவிக்க அவர் 40 சதவீதம் கேட்கிறார். இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்துகொள்கிறேன்'' என அவர் கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.
அமைச்சர் மீது வழக்கு
இதனால் சந்தோஷ் பட்டீல் சாவு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை வாங்குவதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். பிரேத பரிசோதனைக்கும் அவர்கள் அனுமதி அளிக்கவில்லை. இன்று போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவரது உடல் பிரதே பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் சந்தோஷ் பட்டீல் குடும்பத்தினர் கொடுத்த புகாரில் அமைச்சர் ஈசுவரப்பா உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆளுநரிடம் புகார்
இதற்கிடையே தான் ஈசுவரப்பாவை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பெங்களூர் ராஜ்பவனில் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து கடிதம் கொடுத்தனர். அதில், ‛‛உடனடியாக ஈசுவரப்பாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை'' எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ராஜினாமா இல்லை
இது ஒருபுறம் இருக்க இன்று ஈசுவரப்பா சிவமொக்கவில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர், ‛‛எனக்கும், சந்தோஷ் பட்டீலுக்கும் தொடர்பு கிடையாது. அவர் கடிதம் எதுவும் எழுதவில்லை.என்மீது அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியினர் என்னை ராஜினாமா செய்ய வலியுறுத்துகின்றனர். நான் ராஜினாமா செய்வது இல்லை. இந்த விவகாரத்தில் விசாரணை முடியும்போது உண்மை வெளிச்சத்துக்கு வரும்'' என தெரிவித்துள்ளார்.
பாஜக அரசுக்கு சிக்கல்
ஏற்கனவே கர்நாடகத்தில் மதம் சார்ந்த பிரச்சனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் ஈசுவரப்பா 40 சதவீத கமிஷன் தொகை கேட்டதால் உயிரை மாய்ப்பதாக கூறி காண்ட்ராக்டர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவங்களால் கர்நாடகத்தை ஆளும் பாஜகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.