ஒரே கேள்வி.. ‛‛கோட்சே’’ ரயில் நாக்பூரில் எப்போது கிளம்பும்? மத்திய அரசை சாடிய கார்த்தி சிதம்பரம்!
பெங்களூர்: கர்நாடகாவில் முஸ்லிம் மன்னரான திப்பு சுல்தான் நினைவாக மைசூர்-பெங்களூர் இடையே 40 ஆண்டுகளாக இயங்கி வந்த திப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயர் உடையார் எக்ஸ்பிரஸ் ரயில் என மாற்றம் செய்யப்பட்ட நிலையில் நாக்பூரில் இருந்து கோட்சே ரயில் எப்போது இயங்குவீங்க? என கேள்வி கேட்டு மத்திய அரசை கார்த்தி சிதம்பரம் சாடியுள்ளார்.
திப்பு சுல்தான்.. இவர் 1782 முதல் மைசூர் மன்னராக பொறுப்பேற்றார். ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு 1799ல் மரணமடைந்தார். இவர் தனது ஆட்சி காலத்தில் விவசாயத்தில் புதிய திட்டங்களை புகுத்தினார்.
மேலும் பொது வினியோக திட்டத்தை செயல்படுத்தியதோடு போர் பயிற்சியில் கைதேர்ந்து திகழ்ந்தார். மேலும் ராணுவ தொழில்நுட்பத்திலும் கைதேர்ந்தவராக இருந்தார். செயல்பட்டதாக கூறப்படுகிறது. ஆங்கிலேயருக்கு பணியாமல் அவர்களை எதிர்த்து போரிட்ட திப்பு சுல்தானை ‛மைசூர் புலி' என்ற அடைமொழியை பெற்று கொண்டார்.
“டுவிஸ்ட்” கார்த்தி சிதம்பரம்.. காங்கிரஸ் தேர்தலில் யார் “சப்போர்ட்”? பாஜகவை எதிர்க்க “சரியான” ஆளாம்
திப்பு எக்ஸ்பிரஸ் பெயர் மாற்றம்
இந்நிலையில் தான் சமீப காலமாக திப்பு சுல்தான் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. கர்நாடகா பாடத்திட்டங்களில் உள்ள திப்பு சுல்தான் பற்றிய குறிப்புகள் நீக்க பாஜகவினர் கோரிக்கை வைத்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு மத்தியில் பெங்களூர் - மைசூர் இடையே இயங்கி வந்த திப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலின் பெயர் உடையார் எக்ஸ்பிரஸ் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு
மைசூர்-பெங்களூரை இணைக்கும் வகையில் 1980ல் இருந்து இயக்கப்பட்டு வந்த ரயிலின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக மைசூர் பாஜக எம்எபி பிரதாப் சிம்ஹா மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய நிலையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் திப்பு எக்ஸ்பிரஸ் ரயில் பெயரை உடையார் எக்ஸ்பிரஸ் என மாற்றம் செய்யப்பட்டு உள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. முஸ்லிம் மன்னரான திப்பு சுல்தானை வரலாற்றில் இருந்து புறக்கணிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
கோட்சே ரயில் எப்போது?
அந்த வகையில் தான் திப்பு எக்ஸ்பிரஸ் ரயில் பெயர் மாற்றத்துக்கு தமிழகத்தின் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் நாக்பூரில் இருந்து கோட்ேஸ எக்ஸ்பிரஸ் எப்போது இயக்குவீர்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார். இதுபற்றி கார்த்தி சிதம்பரம் எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛அடுத்து என்ன? இந்துத்துவா கதைகளுக்கு ஏற்ப ஹீரோக்களை வில்லன்களாக வரலாற்றை மாற்றி எழுதுங்கள். இந்துத்துவா கொள்கையை முன்னிருத்தியவர்களை தூய்மைப்படுத்தி பிரசார படங்களை உருவாக்குங்கள். எப்போது நாக்பூரில் இருந்து கோட்சே ரயில் இயக்க போகிறீர்கள்?'' என விமர்சனத்தோடு கேள்வி எழுப்பி உள்ளார்.
காரணம் என்ன?
அதாவது ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் என்பது நாக்பூரில் அமைந்துள்ளது. காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கூறி வரும் நிலையில் தான் கோட்சே பெயர் ரயில் இயக்குவது எப்போது எனக்கேட்டு கார்த்தி சிதம்பரம் சாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.