டிரம்ப்பின் இடைவிடாத மோசடி புகார்கள்..உலக நாடுகளில் சந்தி சிரிக்கும் பெரியண்ணன் தேசத்து தேர்தல் முறை
டெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் அய்யோ அய்யகோ மோசடி நடந்துவிட்டதாக இடைவிடாமல் அதிபர் டொனால்ட் டிரம் புகார் கூறிவருகிறார். இத்தகைய குற்றச்சாட்டுகளால் அமெரிக்காவின் தேர்தல் நடைமுறைகள் உலக நாடுகளில் சந்தி சிரித்து கொண்டிருக்கிறது.
உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நவம்பர் 3-ல் நடைபெற்றது. அன்றே வாக்கு எண்ணிக்கை தொடங்கி 4 நாட்களாகிவிட்டது. இன்னமும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றியை தொடும் நிலையில் இருக்கிறார். மீண்டும் போட்டியிட்ட அதிபர் டிரம்ப், தோல்வியைத் தழுவிக் கொண்டிருக்கிறார். ஆனால் தோல்வியை ஏற்க முடியாமல் இரவு பகல் என பாராமல் புலம்பி வருகிறார் டிரம்ப்.
பார்கின்சன் அச்சம்.. அதிபர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறாரா புடின்.. என்ன நடக்கிறது ரஷ்யாவில்?
டிரம்ப் புகார்கள், வாக்குகள்
அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கைகளுக்கு எதிராக எவ்வளவு புகார்களை சொல்ல முடியுமோ அத்தனை புகார்களை அடுக்குகிறார் டிரம்ப். வாக்கு எண்ணிக்கையைத் தடுக்க எத்தனை வழக்குகளை போட முடியுமோ அத்தனை வழக்குகள் போடுகிறது டிரம்ப் தரப்பு. இத்தனைக்கும் அதிபராக இருந்து தேர்தலை நடத்தியதும் டிரம்ப்தான் என்பதுதான் கூத்து.
அதிபர் தேர்வு முறை
இன்னொன்று அமெரிக்காவின் தேர்தல் முறையும் அதிபர் தேர்வு முறையும் இப்போது உலக நாடுகளில் கேலி பேச்சுக்குள்ளாகி இருக்கின்றன. அதிபரை மக்கள் தேர்ந்தெடுக்காமல் மறைமுகமாக தேர்ந்தெடுக்கிற எலக்ட்டோரல் வாக்கு முறை குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அமெரிக்காவின் தேர்தல் நடைமுறையே பிற நாடுகள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத குழப்பமானதாக இருப்பதாக விமர்சிக்கப்படுகின்றன.
தேர்தல் வெற்றி திருட்டு என புகார்
உச்சகட்டமாக தன்னுடைய வெற்றியை ஜோ பிடன் தரப்பு திருடுகிறது என தரலோக்கல் லெவலுக்கு இறங்கி குற்றம்சாட்டுகிறார் டிரம்ப். இப்போதைய சூழ்நிலையில் டிரம்ப்பின் பிடிவாதம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாமல் டிரம்ப் அடம்பிடித்தால் வன்முறைகள் ஏற்படும் சூழலும் உருவாகி உள்ளது.
குழப்பங்களால் கேள்விகள்
பிற நாடுகளில் இத்தகைய ஒரு சூழ்நிலை ஏற்படும் போது முதல் ஆளாக மூக்கை நுழைத்து ஜனநாயகத்தை பற்றி பக்கம் பக்கமாக பேசுகிற அமெரிக்கா, இப்போது எந்த முகத்தை வைத்துக் கொள்ளப் போகிறது? உலகின் பிறநாடுகளில் தேர்தல் வன்முறைகள் வெடித்தால் சர்வதேச படைகளை அனுப்புகிற அமெரிக்காவுக்கு ஐநா அமைதிப்படையை அனுப்ப வேண்டுமா? என்கிற ஏராளமான கேள்விகள் வரிசை கட்டி நிற்கின்றன.