அடிதூள்! இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக தொழிற்சாலைகள்.. குஜராத்திற்கு எந்த இடம் தெரியுமா
டெல்லி: இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிக தொழிற்சாலைகள் உள்ளன என்பது குறித்து மாநில வாரியான டேட்டாவை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
எந்தவொரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் தொழிற்சாலைகளின் பங்கு மிகவும் முக்கியமானது. பெரிய தொழிற்சாலைகளைக் காட்டிலும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் தான் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
இதற்கிடையே மத்திய ரிசரவ் வங்கி நாட்டில் எந்த மாநிலத்தில் அதிக தொழிற்சாலைகள் உள்ளது என்பது குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது. இந்த தரவுகள் நிச்சயம் முதலில் படிப்பவர்களுக்கு ஆச்சரியத்தைத் தருவதாகவே உள்ளது.
" />டக்குனு மாயமான 2000 ரூபாய் நோட்டுகள்! புரியாமல் குழம்பும் நெட்டிசன்கள்! ஓ இதுதான் காரணமா! சுவாரசியம்
அதிக தொழிற்சாலைகள்
இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம் என்றதும் பலருக்கும் இங்குக் குஜராத்தும் குஜராத் மாடலும் தான் நினைவுக்கு வரும். ஆனால், உண்மையில் குஜராத்தைக் காட்டிலும் தமிழ்நாட்டில் தான் அதிக தொழிற்சாலைகள் உள்ளன. அதுவும் குஜராத்தை விடத் தமிழ்நாட்டில் 10,000 தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம் என்ற பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.
தமிழ்நாடு டாப்
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எங்கு அதிகமான சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் உள்ளன என்பது குறித்த தரவுகளை ரிசர்வ் வங்கி ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த பட்டியலில், 1951 முதல் இந்திய மாநிலங்களின் மக்கள்தொகை, மாநில உள்நாட்டு உற்பத்தி, விவசாயம், ஊதியம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட புள்ளி விவரங்கள் விளக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மொத்தம் 38,837 தொழிற்சாலைகள் உள்ளன. கடந்த 2009இல் மாநிலத்தில் 26,790 தொழிற்சாலைகள் இருந்த நிலையில், 10 ஆண்டுகளில் 45% தொழிற்சாலைகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குஜராத்
தமிழ்நாட்டுடன் ஒப்பிடுகையில் குஜராத்தில் சுமார் 10 ஆயிரம் தொழிற்சாலைகள் குறைவாகவே உள்ளது. குஜராத்தில் இப்போது 28,479 தொழிற்சாலைகள் மட்டுமே உள்ளன.. கடந்த 2009இல் அங்கு 15,576 தொழிற்சாலைகள் இருந்த நிலையில், 10 ஆண்டுகளில் 82% அதிகரித்து உள்ளது. அடுத்து மகாராஷ்டிராவில் 25,610 தொழிற்சாலைகளும் ஆந்திரப் பிரதேசத்தில் 16,924 தொழிற்சாலைகளும் உத்தரப் பிரதேசத்தில் 16,184 தொழிற்சாலைகளும் உள்ளன.
அடுத்தடுத்து இடங்கள்
ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 2,46,504 தொழிற்சாலைகள் உள்ள நிலையில், அதில் சுமார் 15.7% தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது. அடுத்தபடியாக குஜராத்தில் சுமார் 11.5% தொழிற்சாலைகள் உள்ளன. மகாராஷ்டிராவில் 10.3% தொழிற்சாலைகளும் ஆந்திராவில் 6.8% தொழிற்சாலைகளும் உத்தரப் பிரதேசத்தில் 6.5% தொழிற்சாலைகளும் உள்ளன. அதேபோல குறைவான தொழிற்சாலைகள் உள்ள இடங்களில் லடாக் (3 தொழிற்சாலை) கடைசி இடத்தில் உள்ளன. அந்தமான் (15) சிக்கிம் (84), அருணாச்சல பிரதேசம் (116), மேகாலயா (158) மாநிலங்கள் அடுத்தடுத்து இடங்களில் உள்ளன.
பலதரப்பட்ட தொழிற்சாலைகள்
தமிழகத்தில் இருக்கும் தொழிற்சாலைகளில் மற்றொரு சிறப்பு உள்ளது. அதாவது சில மாநிலங்களில் குறிப்பிட்ட வகை தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும். அந்த துறையில் எதாவது பாதிப்பு ஏற்பட்டால் மாநில பொருளாதாரம் பாதிக்கப்படும். ஆனால், தமிழ்நாட்டிற்கு அந்த சிக்கல் இல்லை. ஏனென்றால் மாநிலத்தில் பலதரப்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. ஆட்டோமொபைல் தொடங்கி ஜவுளி, தோல் பொருட்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக் உற்பத்தி என பல்வேறு வகையான தொழிற்சாலைகள் இருக்கின்றன.
டிரில்லியன் டாலர் பொருளாதாரம்
தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.. தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) 2022-23 நிதியாண்டில் $320.27 பில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-16 முதல் 2022 வரை மட்டும் மாநில பொருளாதார வளர்ச்சி 11.27 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் 2030க்குள் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், தொழிற்சாலைகள் அதிகரித்து வருவது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
முதலீடு
இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், "முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளார்.. இந்தத் துறைகளில் அதிக முதலீடுகளை அதாவது 45 லட்சம் கோடியை நாம் ஈர்க்க வேண்டும்" என்றார். பெகாட்ரான், ஃபாக்ஸ்கானின் தொழிற்சாலைகள் ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ளன. அதேபோல டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் கூட சமீபத்தில் தமிழ்நாட்டில் கூடுதல் முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.