பொங்கி வரும் காவிரி... மளமளவென நிரம்பும் மேட்டூர் அணை - முன்கூட்டியே திறக்க வாய்ப்பு
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்றில் விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
தருமபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன. அருவியில் குளிக்கவும், பரிசல்களில் பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர் மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல்லில் நேற்று மாலை 8 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்தது இன்று காலை விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
ILTS தலைவரான முதல் ஆசியர் “பிறந்து 5 நாளே ஆன குழந்தை” உயிரை காப்பாற்றியவர் - யார் இந்த முகமது ரேலா?
ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், படகில் சவாரி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆனந்தமாக குளிக்கலாம் என்று நினைத்து வந்த பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
30 ஆயிரம் கனஅடி நீர்
பிரிகுண்டுவிற்கு தற்போது விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. தருமபுரி மாவட்ட காவிரி ஆற்றங்கரையோரப் பகுதிகளை வனம் மற்றும் வருவாய்த் துறை உள்ளிட்ட அரசு துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேட்டூர் அணை நீர் வரத்து
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து மேட்டூர் அணைக்கு வருகிறது. அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து மளமளவென உயர்ந்து வருகிறது.
109 அடியாக உயர்ந்த அணை நீர் மட்டம்
மேட்டூர் அணை நீர்மட்டம் 109 அடியை தாண்டியது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது. தென்மேற்குப் பருவமழை காலத்தில்தான் பொதுவாக மேட்டூர் அணை நிரம்பும். கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் அணை முழு கொள்ளளவை எட்டியது. பல நாட்களாகவே 100 அடி தண்ணீர் இருப்பில் இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு சில தினங்களாக அதிகரித்துள்ளதால் அணை நீர்மட்டம் 109 அடியை எட்டியுள்ளது.
அணை திறக்க வாய்ப்பு
இப்போது தென்மேற்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் மேட்டூர் அணை விரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதியன்று மேட்டூர் அணை திறக்கப்படும். இந்த ஆண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்க உள்ளதால் மேட்டூர் அணையும் முன்கூட்டியே திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.