இதுமட்டும் நடக்காமல் இருந்திருந்தால்... மேற்கு வங்கம் நமது... தோல்விக்கு காரணம் கூறிய பாஜக..!
கொல்கத்தா : 2021ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு, கொரோனா இரண்டாம் அலை பாதிப்பே காரணம் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 தொகுதிகளை கைப்பற்றி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைத்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து களமிறங்கிய பாஜக வெறும் 77 இடங்களை மட்டும் கைப்பற்றியது. இருந்தும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பாஜக பெற்றது.
சிக்னலில் நிற்காத பிஎம்டபிள்யூ கார்..பறந்து சென்ற பாஜக எம்எல்ஏ மகள் - போலீசை மிரட்டியதால் பரபரப்பு
தேர்தல் முடிந்து ஓராண்டு
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த பின், மேற்கு வங்க பாஜகவில் உட்பூசல் தொடங்கியது. இதனால் முன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ, எம்பி அர்ஜூன் சிங், முகுல் ராய் உட்பட உட்பட 5 பேர் எம்எல்ஏ-க்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு சென்றனர். இந்தநிலையில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்கு வங்கம் வந்தார். கொல்கத்தா விமான நிலையம் வந்து இறங்கிய அவருக்கு, மாநில பாஜக சார்பாக பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
தோல்விக்கு என்ன காரணம்?
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜெ.பி.நட்டா பேசுகையில், மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு கொரோனா இரண்டாம் அலை பரவலே காரணம். நான்காவது கட்ட வாக்குப்பதிவு வரை சரியான பிரசாரம் மேற்கொள்ள முடிந்தது. ஆனால், அதன்பின்னர் மக்களை நேரடியாக சந்திப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்தமுறை இல்லையென்றாலும், அடுத்தத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றி வெற்றிப்பேரணி நடத்துவோம் என்று தெரிவித்தார்.
மாநிலத்தில் நீதியை நாட்டுவோம்
இந்திய மக்கள் ஒவ்வொரு பிரச்னைக்கும் சரியான எதிர்வினையாற்றுவதோடு, தேர்தல் மூலம் சரியான பதிலையும் அளித்து வருகிறது. ஜனநாயக ரீதியில் நமது போராட்டத்தை முன் நின்று நடத்துவதோடு, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி நீதியை நிலைநாட்டுவோம் என்று தெரிவித்தார்.
சிறைக்கு அனுப்பப்படுவார்கள்
தொடர்ந்து பீஹாரில் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் சிறை செல்வார் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால் சட்டத்தின் நடவடிக்கையால் அது நடைபெற்றுள்ளது. அதேபோல் மேற்கு வங்கத்திலும் ஊழலில் ஈடுபடுவோர் அனைவரும் விரைவில் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். அந்த நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்று எச்சரிக்கை விடுத்தார்.
வங்கத்தின் பெருமை
பாஜகவின் போராட்டத்தின் மூலமாக வங்கத்தின் பெருமையை நிலைநிறுத்த வேண்டும். மாநிலத்தின் [பெருமை இலக்கியப் படைப்புகளில் மறைக்கப்படாமல் இருக்கிறது. அதனை இழிவுபடுத்துவோரை நாம் அம்பலப்படுத்த வேண்டும். சுவாமி விவேகானந்தர் கூறிய வார்த்தைகளின் படி நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.