சோட்டா ராஜன் இந்த வார இறுதிக்குள் இந்தியா கொண்டு வரப்படுவார்!
டெல்லி: இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள நிழலுலக தாத சோட்டா ராஜன் இந்த வார இறுதிக்குள் இந்தியா கொண்டுவரப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் பல கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த நிழலுலக தாதா சோட்டா ராஜன் இந்தோனேசிய பாலி தீவில் பதுங்கியிருந்தபோது அந்நாட்டு போலீஸ் அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
மும்பையில் பிறந்து வளர்ந்த ராஜேந்திர சதாஷிவ் நகால்ஜி என்கிற சோட்டா ராஜன் (55), 1995 ஆம் ஆண்டு, தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியாக இருந்தவர் சோட்டா ராஜன். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தேடப்பட்டுவந்த சோட்டா ராஜன், இந்தோனேசியாவின் பாலி தீவில், இன்டர்போல் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ஆஸ்திரேலியா கொடுத்த தகவலின் பேரில், இந்தோனேசியா அரசின் ஒத்துழைப்பால், இன்டர்போல் போலீஸார் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஜோட்டா ராஜனை இந்தியா கொண்டுவரும் வேலையில் மும்பை போலீசாரும், சிபிஐ அதிகாரிகளும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தற்போது இந்தோனேசியாவில் உள்ள ஜோட்டா ராஜன் இண்டர்போல் உதவியுடன் இந்த வார இறுதிக்குள் இந்தியா அழைத்து வரப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜோட்டா ராஜன் இந்தியா கொண்டுவரப்படும் பட்சத்தில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும், அவரை சிறையில் அடைப்பது குறித்தும் மும்பை போலீசார் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் இந்தோனேசிய போலீசார் அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த மாதம் சோட்டா ராஜன் வேறு ஒரு பெயரில் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்ததை பெடரல் போலீஸ் உறுதி செய்தது. எனினும், அவர் எங்கு தங்கியிருந்தார் என்ற விவரங்கள் கிடைக்காத நிலையில், தற்போது பாலியில் அவர் கைது செய்யப்பட்டார்.
இன்டர்போல் விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு சிபிஐயிடம் தரப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்திலும் சிபிஐதான் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.