தேசத்தின் வரைபடம் மாறியது.. உதயமாகின 2 யூனியன் பிரதேசங்கள்- துணை நிலை ஆளுநர்கள் பதவியேற்பு
Recommended Video
ஶ்ரீநகர்/ லே: தேசத்தின் வரைபடத்தில் புதிய மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் இன்று முதல் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
நாடு விடுதலை அடைந்த போது தனி சமஸ்தானமாக இருந்தது ஜம்மு காஷ்மீர். ஆனால் இதனை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சித்தது.
இதையடுத்து இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் ஒருங்கிணைந்த பகுதியாக இணைந்தது. அப்போது ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டது.
சர்தார் வல்லபாய் பட்டேல் 144-வது பிறந்த நாள்- குஜராத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை!
சிறப்பு அந்தஸ்து
இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் வெளிமாநிலத்தவர் சொத்து வாங்க தடை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அந்தஸ்துகள் வழங்க அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டது. இதில் பல சரத்துகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டும் வந்தன.
சிறப்பு அந்தஸ்து நீக்கம்
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இச்சிறப்பபு அந்தஸ்து வழங்கும் இந்த அரசியல் சாசனப் பிரிவு 370-வதை ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு நீக்கியது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இனி ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.
|
துணை நிலை ஆளுநர்கள் பதவியேற்பு
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு முர்மா, லடாக் யூனியன் பிரதேசத்துக்கு ஆர்.கே. மாத்தூர் ஆகியோர் துணை நிலை ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து இன்று காலை லேவில் எளிமையாக நடைபெற்ற நிகழ்வில் ஆர்.கே. மாத்தூர், துணை நிலை ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நடைமுறைக்கு வந்த யூனியன் பிரதேசங்கள்
பின்னர் ஶ்ரீநகரில் துணை நிலை ஆளுநர் முர்மாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் கீதா மிட்டல். இன்று முதல் புதிய யூனியன் பிரதேசங்கள் நிர்வாக ரீதியாக நடைமுறைக்கு வந்துவிட்டன.
வரைபடத்தில் புதிய யூனியன் பிரதேசங்கள்
இதனையடுத்து நாட்டின் மாநிலங்கள் எண்ணிக்கை 28 ஆகவும் யூனியன் பிரதேசங்கள் எண்ணிக்கை 9 ஆகவும் இருக்கும். இன்று முதல் தேசத்தின் வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் என்கிற ஒரு மாநிலம் இல்லாமல் போய் 2 புதிய யூனியன் பிரதேசங்கள் உதயமாகி இருக்கின்றன.
சத்யபால் மாலிக் கோவாவுக்கு மாற்றம்
இதுவரை ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் தற்போது கோவா மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல் ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக இருந்த கே.விஜயகுமார் தமது பணிக்காலம் நிறைவடைந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
லடாக்குக்கு சட்டசபை இல்லை
புதிய யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் சட்டசபை இருக்கும். லடாக் யூனியன் பிரதேசமானது சட்டசபை இல்லாமல் துணை நிலை ஆளுநரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.