5 ஏக்கர் அரசு நிலத்தை அபகரித்த அமைச்சர் தேஷ்பாண்டே - ஆதாரங்களை வெளியிட்டார் குமாரசாமி
பெங்களூரு: பெங்களூரு ஜக்கூர் விமான நிலையத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 5 ஏக்கர் நிலம் தொழில்துறை அமைச்சர் தேஷ்பாண்டே மற்றும் அவரது மனைவி பெயருக்கு பட்டா மாற்றப்பட்டுள்ளதற்கான ஆதாரங்களை முன்னாள் முதல்வர் குமாரசாமி வெளியிட்டார். இதனால், தேஷ்பாண்டேயின் பதவிக்கு சிக்கல் உருவாகி உள்ளது.
பெங்களூரில், நிருபர்களிடம் நில ஆக்கிரமிப்புக்கான ஆவணங்களை அளித்து குமாரசாமி, "கடந்த 1940 இல் எலஹங்கா ஹோப்ளி அல்லாலசந்திரா கிராமத்தில் 177 ஏக்கர் பரப்பளவுள்ள "ஜக்கூர் பிளான்டேஷன்" வனப்பகுதியாக அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த முழுமையான நிலத்தை பெரிய, பெரிய கட்டுமான அதிபர்கள், முக்கிய புள்ளிகள் ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை 50 நபர்களுக்கு "நோட்டீஸ்" அனுப்பியுள்ளது. இந்த பட்டியலில் அமைச்சர் தேஷ்பாண்டே, அவரது மனைவி ராதா தேஷ்பாண்டே ஆகியோரது பெயர்களும் உள்ளன.
வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் இவர்களின் பெயரில் 5 ஏக்கர் நிலம் பட்டா மாற்றப்பட்டுள்ளது. இதே பகுதியில் கட்டுமான நிறுவனங்களான "தயானந்த் பிரைவேட் மந்த்ரி டெவலப்பர்", "ஷோபா டெவலப்பர்ஸ்" உட்பட பலர் சட்டவிரோதமாக வனப்பகுதியை பெற்றிருந்தும் அக்கட்டடங்களை அப்புறப்படுத்த வனத்துறை முன்வரவில்லை.
நிலத்திருடர்களுடன் காங்கிரஸ் அரசு தொடர்பு கொண்டுள்ளது. நிலத்தை ஏழைகள் ஆக்கிரமித்திருந்தால் தயவு தாட்சண்யமின்றி அதை அப்புறப்படுத்தும் காங்கிரஸ் அரசு முக்கிய புள்ளிகள் ஆக்கிரமித்துள்ள வனப்பகுதியின் ஆக்கிரமிப்பை அகற்ற ஏன் முயற்சிக்கவில்லை?
பட்டியலில் இந்த வனப்பகுதியில் 17 ஏக்கர் நிலத்தை "சென்சூரி பில்டர்ஸ்" வாங்கியுள்ளது. "தயானந்தா பிரைவேட் மந்த்ரி பில்டர்ஸ்" இந்த வனப்பகுதி நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து 100 கோடி ரூபாய் கடன் பெற்று உள்ளது. ஆனால், இது பற்றியும் எந்த
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தலைமை வனப்பாதுகாப்பு அதிகாரி ஆய்வுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படவும் இல்லை. அரசின் நிர்வாகம் இப்படி உள்ளது. இவை அனைத்தும் கடந்த இரண்டு மாத காலகட்டத்தில் நடந்துள்ளது. வனப்பகுதியில் 150 பேர் சட்ட விரோதமாக பட்டா பெற்றுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
தேஷ்பாண்டே மற்றும் அவரது மனைவி மீதான புகாரால், சித்தராமையாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. ஏற்கனவே அமைச்சரவையை மாற்றுவது தொடர்பாக முதல்வர் ஆலோசித்து வரும் நிலையில் தேஷ்பாண்டே அமைச்சர் பதவி தப்புமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.