"ஏன்டா இப்படி பண்றீங்க.." அதட்டிய ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவர்.. அப்படியே சரிந்த டீச்சர்
லக்னோ: 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தனது ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனைவரது வாழ்க்கையிலும் பெற்றோருக்குப் பின் மிகவும் முக்கியமானவர் என்றால் அது ஆசிரியர்கள் தான். பல பேரின் வாழ்க்கை ஆசிரியர்களாலும் அவர்கள் அளிக்கும் அறிவுரைகளாலும் மாறியுள்ளது.
தலைசிறந்த பலரது வாழ்க்கையையும் செதுக்கியவர்கள் ஆசிரியர்கள் தான். அப்படிப்பட்ட ஆசிரியர்களை அனைத்து மாணவர்களும் மதித்துப் போற்ற வேண்டும்.

தாக்குதல்
ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே நடக்கும் சம்பவங்கள் எல்லாம் ஆசிரியர்களையே அச்சப்பட வைக்கும் அளவுக்கு உள்ளது. திட்டினார்கள், அடித்தார்கள் என்பதால் எல்லாம் ஆசிரியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது. அதிலும் கொரோனாவுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர், இது போன்ற சம்பவங்கள் பல மடங்கு அதிகரித்து உள்ளது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

உத்தரப் பிரதேசம்
இதனிடையே அப்படியொரு சம்பவம் தான் உத்தரப் பிரதேசத்தில் நடந்து உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் பள்ளி மாணவர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு தனது ஆசிரியரைச் சுட்டுள்ளார். பள்ளியில் அந்த மாணவருக்கும் மற்றொரு மாணவருக்கும் சண்டை ஏற்பட்டு உள்ளது இதில் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த அந்த மாணவர் இந்த விபரீத சம்பவத்தில் இறங்கி உள்ளார்.

துப்பாக்கிச் சூடு
அந்த மாணவன் ஆசிரியரை நோக்கி மூன்று முறை சுட்டுவிட்டு துப்பாக்கியுடன் அங்கிருந்து ஓடிவிட்டான். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கி உள்ளனர். நல்வாய்ப்பாகத் துப்பாக்கி குண்டுகள் எதுவும் முக்கிய உறுப்புகளைத் தாக்கவில்லை. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஆசிரியர் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜஸ்ட் மிஸ்
இருப்பினும், அவர் இப்போது ஆபத்தான நிலையைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் இப்போது மேல் சிகிச்சைக்காக லக்னோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார். ஆசிரியரை மாணவர் சுடும் அந்த ஒட்டுமொத்த சம்பவமும் அங்கே இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிசிடிவி
இணையத்தில் வெளியாகி உள்ள இந்த சிசிடிவி காட்சியில், மாணவர் கையில் துப்பாக்கியுடன் ஆசிரியரைத் துரத்துவது தெளிவாகப் பதிவாகி உள்ளது. ஆனால், சில நிமிடங்களில் ஆசிரியரை அந்த மாணவர் பிடித்து விடுகிறார். அப்போது தான் மாணவர் அவரை சுட்டுள்ளார். ஆசிரியர் மாணவரிடம் இருந்து தப்ப முயல்வதும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகி உள்ளது.

என்ன நடந்தது
அதற்குள் இங்கு இருந்த நபர் ஒருவர் ஓடிச் சென்று அந்த மாணவரைப் பிடித்துவிட்டார். மேலும், துப்பாக்கியைக் கீழே போட்டுவிடும்படி சுற்றி இருந்தவர்கள் அந்த மாணவரை மிரட்டுவதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. மாணவரைப் பிடிக்கும் முன்பு, அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிடுகிறார். சும்மா திட்டியதற்கு எல்லாம் மாணவர் தன் மீது இந்தளவு கோபத்தில் இருப்பார் எனத் தான் துளியும் எதிர்பார்க்கவில்லை என்று அந்த ஆசிரியர் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications