சிவசேனாவின் ஆட்சி, கட்சி, சின்னம் அத்தனையும் அம்போ? 'பாட்ஷா' முகத்தை காட்டப் போகும் உத்தவ் தாக்கரே!
மும்பை: மகாராஷ்டிராவில் எந்த அரசியல் கட்சியுமே எதிர்பார்க்காத புதிய திருப்பமாக ஒட்டுமொத்தமாக சிவசேனா என்ற கட்சி, அதன் சின்னம் அத்தனையும் அக்கட்சியின் நிறுவனர் பால்தாக்கரேவின் அரசியல் வாரிசான உத்தவ் தாக்கரேவிடம் இருந்து பறிபோகும் நிலைமை உருவாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அதிருப்தி தலைவர்களுக்கு எதிராக போராட்டங்களில் தொண்டர்களை இறங்க உத்தரவிட்டுள்ளதாம் சிவசேனா தலைமை.
Recommended Video
மகாராஷ்டிராவில் தீவிர இந்துத்துவா மற்றும் மண்ணின் மைந்தர் முழக்கத்தை அடிப்படையாக கொண்ட கட்சியாக இருக்கிறது சிவசேனா. மகாராஷ்டிரா தேர்தல் அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக இருந்த டான் கட்சிதான் சிவசேனா. பாஜக மற்றும் சிவசேனா ஆகியவற்றின் கொள்கைகள் ஒன்று என்பதால் இரண்டும் இயற்கையான கூட்டணி கட்சிகளாக இருந்தன.
கர்நாடகாவில் கோயில் நிதி “ரூ.20 கோடி” சுருட்டிய 5 பூசாரிகள்.. போலி இணையதளம் நடத்தி ”சதுரங்க வேட்டை”
சிவசேனா, பாஜக
ஆனால் 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் களநிலவரம் மாறியது. பாஜகவுடனான கூட்டணியை நிரந்தரமாக முறித்துக் கொண்டு சிவசேனா எதிரியாக மாறியது. அத்துடன் சிவசேனா கொள்கைகளுக்கு நேர் எதிராக உள்ள தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. அன்று முதல் பாஜகவின் பழிதீர்க்கும் படலும் தொடங்கிவிட்டதாகவே கூறப்பட்டது.
ஏக்நாத் ஷிண்டே கலகம்
தற்போது பாஜக ஆதரவுடன் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, 50 எம்.எல்.ஏக்களுடன் போர்க்கொடி தூக்கிவிட்டார். அஸ்ஸாம் குவஹாத்தியில் முகாமிட்டுள்ள ஏக்நாத் ஷிண்டேவுடன் சிவசேனாவின் 40 எம்.எல்.ஏக்களும் இதர கட்சிகள்,சுயேட்சைகள் என 10 பேரும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கொந்தளித்துப் போயிருக்கிறார் முதல்வர் உத்தவ் தாக்கரே. முதல் கட்டமாக 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கையையும் உத்தவ் தாக்கரே மேற்கொண்டிருக்கிறார்.
ஆத்திரத்தில் உத்தவ்
ஆனாலும் உத்தவ் தாக்கரேவால் இந்த கலகக் குரலை ஜீரணிக்க முடியவில்லை. அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் பேசும் உத்தவ் தாக்கரே, நேருக்கு நேராக வந்து சொல்லுங்க.. பதவியை ராஜினாமா செய்கிறேன். என்னால கட்சியை நடத்த முடியாதுன்னு நேரில் வந்து சொல்லுங்க.. கட்சியை விட்டே போகிறேன் என உருக்கமாக பேசி வருகிறார். உத்தவ் தாக்கரேவின் இந்த உருக்கமான பேச்சு சிவசேனா தொண்டர்களை கொந்தளிக்கவும் வைத்திருக்கிறது. அதிருப்தி எம்.எல்.ஏக்களின் அலுவலகங்களை சிவசேனா தொண்டர்கள் சூறையாடி இருக்கின்றனர்.
களமிறங்கும் தொண்டர்கள்
இப்போதைக்கு சிவசேனா என்ற கட்சியின் பெயர், அதன் வில் அம்பு சின்னம் என அத்தனைக்கும் ஏக்நாத் ஷிண்டே உரிமை கோர திட்டமிட்டுள்ளார். இது பால்தாக்கரே குடும்பத்துக்கே பெருத்த அவமானமாக பார்க்கப்படுகிறது. அதனால் உத்தவ் தாக்கரே இதனை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுத்துவிடுவார் எனவும் கூற முடியாது. இனிவரும் நாட்களில் சிவசேனா தொண்டர்கள் தெருக்களில் இறங்கி அதிருப்தியாளர்கள், பாஜகவுக்கு எதிராக உக்கிர முகத்தைக் காட்டுவார்கள் எனவும் கூறப்படுகிறது.