சொர்ணாக்காவாக மாறி பழிக்குப் பழிவாங்குவேன்... ரவுடி மகாவின் காதலி ஆவேசம்
வேலூர்: என் காதலனை கொலை செய்தவர்களை சொர்ணாக்காவாக மாறி பழிக்கு பழி வாங்குவேன் என்று அ.தி.மு.க. பிரமுகர் மீதான கொலை முயற்சி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள செண்பகவள்ளி ஆவேசமாக போலீசாரிடம் கூறி உள்ளார். ரவுடி மகாவின் வாழ்க்கையில் காதலியாக நுழைந்த செண்பகவள்ளிதான் தலைமறைவாக இருந்த மகாவிற்கு அடைக்கலமாக இருந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
வேலூர் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரும், அ.தி.மு.க. பிரமுகருமான ஜி.ஜி.ரவி, வேலூர் தோட்டப்பாளையம் திரௌபதியம்மன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடந்த 5 ஆம் தேதி வந்திருந்தார். அப்போது அவரை, வேலூர் ரவுடி ‘மகா' என்கிற மகாலிங்கம் வெட்டிக் கொலை செய்ய முயன்றார். ஆனால், அதிர்ஷ்டவசமாக ஜி.ஜி.ரவி படுகாயத்தோடு உயிர் தப்பினார்.
இதில் ஆத்திரம் அடைந்த ஜி.ஜி.ரவியின் ஆதரவாளர்கள், மகாவையும், அவருடன் வந்த கூட்டாளிகளான குப்பன் உள்ளிட்டோரையும் துரத்திச் சென்றனர். இதில், ரவியின் ஆதரவாளர்களிடம் மகா மட்டும் தனியாக சிக்கிக்கொள்ளவே அவரை ரவியின் ஆதரவாளர்கள் சரமாரியாக கல்லால் தாக்கி கொலை செய்ததுடன், மகாவின் முகத்தை கல்லைக் கொண்டு சிதைத்தனர். கொன்றதோடு மட்டுமல்லாது செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜி.ஜி.ரவியின் மகன்கள் கோகுல், தமிழ்மணி, மகாவின் காதலி செண்பகவள்ளி மற்றும் 3 ஆண்கள் என 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மகாவின் காதலி
போலீசார் நடத்திய விசாரணையில், செண்பகவள்ளி அணைக்கட்டைச் சேர்ந்தவர் என்பதும், இவர், வேலூர் அண்ணாநகரில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்ததும், அதிரடி மகாவும், இவரும் காதலித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் ஜாமீனில் வெளியே வந்த மகா, தலைமறைவான பின்னர் தனது கூட்டாளிகளான குப்பன், சுரேஷ் ஆகியோருடன் செண்பகவள்ளியின் வீட்டில் கடந்த 3 மாதங்களாக தங்கியிருந்ததும் தெரியவந்தது.
யார் இந்த செண்பகவள்ளி
வேலூரை அடுத்த அணைக்கட்டு ஊனை வாணியம்பாடியை சேர்ந்தவர் செண்பகவள்ளி. இவருக்கு கடந்த 2004 ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் திருமணமானது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இதனால் செண்பகவள்ளி தனிமையில் வசித்தார்.
ரவுடியின் காதலி
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த ரவுடி சரவணன் என்பவருடன் செண்பகவள்ளியின் தோழி ஒருவருக்கு பழக்கம் இருந்தது. தோழியுடன் ஓமலூர் சரவணனைச் சந்திக்க சென்றுள்ளார். அப்போது அங்கு வேலூரை சேர்ந்த ரவுடி மகா அடைக்கப்பட்டிருந்தான். ஏற்கெனவே மகா பற்றி அறிந்திருந்த செண்பகவள்ளி, அவர் மீது ஆசை கொண்டார். மேலும் மகா தன்னுடன் இருந்தால் பாதுகாப்பாக இருக்கலாம் என நினைத்தார்.
சிறையில் வளர்ந்த காதல்
சரவணன் மூலம் மகாவை சந்திக்க ஏற்பாடு செய்தார். சேலம் சிறையில் மனு கொடுத்து முதன் முறையாக மகாவை, செண்பகவள்ளி சந்தித்தார். முதல் சந்திப்பில் இருவரும் மனம்விட்டு காதலை பகிர்ந்து கொண்டுள்ளனர். மகா ஜாமீனில் வெளியே வர, செண்பகவள்ளி உடந்தையாக இருந்தார். மகா வெளியே வந்ததும், வேலூர் அண்ணாநகரில் செண்பகவள்ளி தங்கியிருந்த வீட்டில் தங்கினான்.
மகாவின் மனைவி
ரவுடி மகா, அண்ணாநகரில் தங்கியிருந்தது யாருக்கும் தெரியவில்லை. அவர்கள் பகல் நேரங்களில் வெளியே வருவது கிடையாது. செண்பகவள்ளி வேலூர் டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு அடிக்கடி செல்வார். தான் மகாவின் மனைவி என்றும், அவரை பற்றி தகவல் தெரிந்தால் கூறுங்கள் என்றும் சொல்லி, மகா மீது போலீசாரின் பார்வை எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து உளவு பார்த்ததும் தெரியவந்துள்ளது.
பழிக்குப் பழி வாங்குவேன்
மகா கொலை செய்யப்பட்ட உடன் கைதாகி வேலூர் சிறையில் உள்ள மகாவின் காதலி செண்பகவள்ளி, ''என் காதலன் மகாவை கொடூரமாக அடித்துக் கொலை செய்தவர்களை நான் சும்மாவிடமாட்டேன். அவர்களை சொர்ணாக்காவாக மாறி பழிக்குப் பழி வாங்குவேன்" என்று ஆவேசமாக கூறி உள்ளார்.
தென்மாவட்ட ரவுடிகள்
ரவுடி மகா கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த தென்மாவட்ட ரவுடிகள் சிலர் மகாவை கொலை செய்தவர்களை பழிவாங்க திட்டமிட்டு வேலூரில் முகாமிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து அவர்களை கைது செய்ய வேலூர் மாவட்ட போலீசார் தீவிரம் கட்டி வருகின்றனர்.
சிறையில் தொடர்பு
சிறைச்சாலைகளில் மகா இருந்தபோது அங்கு அடைக்கப்பட்டிருந்த தென் மாவட்ட ரவுடிகளுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்புக்காகவே மகாவை கொலை செய்தவர்களை பழிவாங்க செண்பகவள்ளிக்கு உதவி செய்வதற்காக வேலூர் பகுதிகளில் முகாமிட்டுள்ளனராம் தென் மாவட்ட ரவுடிகள் இது வேலூர் மாவட்ட போலீசாரின் தலைவலியை அதிகரித்துள்ளது.