"வாட்.. என்ன சார் சொல்றீங்க?".... நிலவுக்கு நெருப்பென்று பெயர் (22)
- சுதா அறிவழகன்
"என்ன சொல்றீங்க.. எந்த இடத்துல"
"..................."
"சரி நான் உடனே வர்றேன்"
போனை வைத்த ஜெயசிங், பரந்தாமனிடம் திரும்பினார்.
"பரந்தாமன்.. நாம் ஃ பூல் ஆகிட்டோம்.. ராணிப்பேட்டையில் சிசிடிவியில் சிக்கிய கார் நாம தேடிட்டிருக்கிற கார் இல்லை. அலிபி கிரியேட் பண்ணிருக்காங்க. ஒரிஜினல் கடத்தல் கார் இப்போ தி.நகர்ல சிக்கிருக்கு.. அதுவும் விபத்துக்குள்ளாகி"
"வாட்.. என்ன சார் சொல்றீங்க.. புரியலையே"
"ஒரே மாதிரி 2 காரை செட் பண்ணிருக்கானுக.. ரெண்டுக்கும் ஒரே மாதிரி நம்பர் பிளேட் போட்டு ஆளுக்கு ஒரு பக்கம் திருப்பி விட்டிருக்கானுக. நம்மளோட விசாரணையை டைவர்ட் பண்றதுக்காக இப்படி பண்ணிருக்காங்க.. நாமளும் ஏமாந்துட்டோம்"
"பெரிய கிரிமினல்ஸா இருப்பானுக போலயே"
"கண்டிப்பா.. நாம நம்ம போலீஸ் புத்தியை காட்டுவோம்.. முதல்ல தி.நகர் போகலாம்"
-----------------------
அம்மா தனியாக தவித்துக் கொண்டிருந்ததால் வீட்டுக்கு வந்து விட்டான் சுனில். மனசெல்லாம் நெருப்பாக கொதித்தது. ஒரு நொடி கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை. யார் ப்ரீத்தியைக் கடத்தியிருப்பார்கள் என்ற கேள்விதான் மனதைக் குடைந்து கொண்டிருந்தது.
ரேவதி அழுதபடியே இருந்தார். ப்ரீத்தியை கடத்தி விட்டார்கள் என்ற செய்தி கிடைத்தது முதல் தவித்துக் கொண்டிருக்கிறார். மனசெல்லாம் வலி.. சுனில் எவ்வளவு தேற்றியும் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பல கேள்விகள் தலையைக் குடைந்து கொண்டிருந்தன.
"சுனில்.. ப்ரீத்தி செல்லுக்கு டிரை பண்ணியா திரும்ப"
"விடாம பண்ணிட்டேதாம்மா இருக்கேன்.. ஸ்விட்ச் ஆப் ஆகியேதான் இருக்கு. அந்த நாய்ங்க போனை பிடுங்கி வச்சிருக்கணும்"
"செல்போன் சிக்னலை வச்சு கண்டுபிடிப்பாங்களாமே.. அது மாதிரி கண்டுபிடிக்க முடியாதா"
"அதுக்கு செல்போன் ஆன்ல இருக்கணும். அப்படி இருந்தாதான் கண்டு பிடிக்க முடியும்மா" விரக்தியாக பதிலளித்தான் சுனில்.
என்ன செய்வது என்று தெரியாமல் செல்லை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான் சுனில். வீட்டு வாசலில் கிடந்த சேரில் விழுந்தான். மீண்டும் ப்ரீத்திக்கு நம்பரை அழுத்தினான்.. வழக்கம் போலத்தான்.. ஸ்விட்ச் ஆப் மெசேஜ் வந்தது.
அப்படியே கண்ணை மூடி சேரில் சாய்ந்திருந்தான்.. பழைய நினைவுகள் அலை மோதியபடி.. தலையை வந்து அழுத்தின.
--------------------------
"ப்ரீத்தி நாளைக்கு பீச்சுக்குப் போலாம்.. சாயந்திரம் 5 மணிக்கு வந்துரு"
"எந்த இடத்துக்கு வர"
"திருவான்மியூர் டெப்போவுக்கு வந்து வெயிட் பண்ணு.. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்"
"ம் சரி.. என்ன கலர் டிரஸ் போட"
"க்ரீன்"
"ஓகே ஓகே"
சொன்னபடி 5 மணிக்கு வந்தான் சுனில். இருவரும் சிட்டாகப் பறந்தார்கள் பீச்சுக்கு. வழக்கமாக உட்காரும் இடத்துக்குப் போய் கடற்கரை மண்ணில் விழுந்தார்கள். ப்ரீத்தி மனதளவில் குழந்தைதான். மண்ணைக் குவித்து மேடாக்கி உட்கார்ந்தாள்.
"இந்தப் பழக்கத்திலிருந்து இன்னும் நீ விடுபடலையா"
"எதுக்கு விடுபடணும்"
"இல்லை.. பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க"
"என்ன நினைச்சாலும் எனக்கென்ன கவலை சுனில்.. இதெல்லாம் சின்னச் சின்ன சந்தோஷம் சுனில்... எப்பவுமே அனுபவிக்கலாம்."
சிரிச்சபடி சொன்ன ப்ரீத்தியைப் பார்த்துப் பூரித்தான் சுனில். எத்தனை எதார்த்தமாக இருக்கிறாள் ப்ரீத்தி.
"சுனில்.. ஒரு கவிதை சொல்லு"
"இப்பவா.. திடீர்னு கேட்டா வராதே"
"அட இவ்வளவு அழகான பொண்ணு பக்கத்துல இருக்கு.. பார்த்து ஏதாவது பண்ணுங்க சார்.. தோணும்"
"நிஜமாவே வரலை ப்ரீத்தி"
"ஏன் வரலை"
"ஏன்னா நீயே ஒரு கவிதை.. உன்னை வைத்து எப்படி இன்னொரு கவிதை வடிப்பது"
" இது ஐஸ்"
"நிச்சயம் கிடையாது.. உன்னோட க்யூட்னெஸுக்கு இணையா இன்னொரு விஷயத்தை என்னால கற்பனை கூட செஞ்சு பார்க்க முடியாது"
"ஆஹா.. கவிதை வரப் போகுது.. அறிகுறிகள் தென்படுது"
"ஹாஹாஹா.. அப்படியெல்லாம் ஒன்னுமில்லை"
"யோவ் ஒரு வரியாச்சும் சொல்லுய்யா.. ப்ளீஸ்யா"
"ஹிஹிஹி.. என்ன நீ இப்படி கெஞ்சுற லெவலுக்கு இறங்கிட்ட"
"உன் வாயால என்னைப் பாடி கேட்கத்தான்"
"சரி இரு சொல்றேன்"
என் இதயத்தில் விழுந்த பூ நீ
நீ விழுந்த வேகத்தில்
நான் எழுந்தேன்
என்னுள் ஏற்பட்ட ஒவ்வொரு எழுச்சியையும்
தீட்டிய சிற்பி நீ
நீ விழ விழ
நான் எழுவேன்
உயிர் வாழுவேன்
என் உயிர் ஓவியமே
எனக்குள்ளேயே இரு
நீங்காத காவியமாக
"போதுமா.."
"வாவ் சூப்பர்.. நல்லாருக்கு... சுனில்.. ஒரு டவுட்.. ஏன் இந்த அலைகள் இப்படியே வந்து வந்து மோதிட்டிருக்கு. அதுக்கு ஓய்வே கிடையாதா"
"அலைகளுக்கு எப்படி ஓய்வு.. அது ஓயாமல் எழுந்தபடியும், கரையில் வந்து விழுந்தபடியும்தான் இருக்கும். அதனால்தான் அலைகள் ஓயவதில்லை"
"ஒவ்வொரு அலையும் என்னைப் போலத்தான் சுனில்"
"எப்படி"
"நான் வந்து மோதும் கரை நீயல்லவா"
"பார்ரா.. நீ என்னை விட சூப்பரா கவிதை சொல்றியே"
" அப்படியா.. பூவோட சேர்ந்த நாரும் மணக்கும்ல.. உங்க கூட சேர்ந்ததால் வந்த எபக்ட்"
"ஆமாமா மணக்கும் மணக்கும். என்னை வந்து தழுவும் அலையை எப்போதும் தாங்கிப் பிடிக்கும் கரையாய் நான்.. "
"இந்த காதல் அலையும் ஓயாது இல்லை சுனில்.. கடைசி வரை என்னை இதேபோல காதலிப்பியா சுனில்"
"காதலை சொல்லிக் காட்ட முடியாது ப்ரீத்தி.. அது உணர்வு.. வாழ்ந்து காட்ட வேண்டியது.. வாழ்ந்து அனுபவிக்க வேண்டியது.. உன்னோட காதல் எப்போது என்னைத் தழுவியதோ.. அன்றே நான் வாழ ஆரம்பிச்சுட்டேன்.. ஒவ்வொரு நொடியிலும் உனக்கும் அதை உணர்த்தியபடியேதான் இருக்கிறேன். நாளைக்கு எனக்கு எத்தனை வயதானாலும் இதே உணர்வோடுதான் உன்னிடம் பேசிக் கொண்டிருப்பேன்.. நீ என்னோட ஆதாரம் ப்ரீத்தி"
"தேங்க்ஸ்டா செல்லப் பையா"
"தேங்க்ஸ்டி தேங்காய் பர்பி"
விர்ரென்று அடித்த செல்போன் ரிங்டோனில் நினைவு கலைந்து விழித்தான் சுனில். மறு முனையில் இன்ஸ்பெக்டர் ஜெயசிங்.
"சார்"
"சுனில்.. கிட்டத்தட்ட ப்ரீத்தியின் கடத்தலுக்கான காரணத்தை நெருங்கிட்டோம்.. ஒரு முக்கியத் துப்பு கிடைச்சிருக்கு.. போலீஸ் டீம் ஒன்று நாளைக்கு திருவண்ணாமலை விரைகிறது. அங்கு நாங்கள் எதிர்பார்க்கும் தகவல் கிடைத்து விட்டால்.. ப்ரீத்தி கடத்தல் தொடர்பான பல குழப்பங்களுக்கு விடை கிடைச்சிரும். நம்பிக்கையோட இருங்க.. நல்ல செய்தி விரைவில் வரும்"
"சார்.. நானும் வர்றேன் சார்.. என்னையும் கூட்டிட்டுப் போங்க.. ப்ளீஸ்"
"இல்லை.. இது முக்கியமான ஆபரேஷன்.. டிபார்ட்மென்ட் ஆட்கள் தவிர யாரும் இடம் பெற முடியாது. நீங்க காமா இருங்க.. நான் உங்களுக்கு அப்டேட் பண்றேன்"
ஜெயசிங் போனை வைத்தார். சுனிலுக்கு சின்னதாக நம்பிக்கை வந்தது.
(தொடரும்)
பகுதி [ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 ]