கடுமையாகும் விதிகள்.. தெலுங்கானாவில் மே 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.. முதல்வர் கேசிஆர் அதிரடி!
ஹைதராபாத்: கொரோனா பாதிப்பு காரணமாக தெலுங்கானாவில் மே 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுக்க மத்திய அரசு மூலம் மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பின் கொரோனா பரவல் குறைவாக உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தெலுங்கானாவில் கொரோனா நாளுக்கு நாள் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. அங்கு கொரோனா காரணமாக 809 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் அங்கு 186 பேர் குணமடைந்து உள்ளனர். மேலும் 605 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுவரை மொத்தம் 18 பேர் தெலுங்கானாவில் பலியாகி உள்ளனர். தெலுங்கானாவில் இறப்பு விகிதம் அதிகமாகி வருகிறது. ஹைதராபாத்தில் மட்டும் 448 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் தெலுங்கானாவில் கொரோனா காரணமாக விதிமுறைகள் தீவிரமாக்கப்பட்டு உள்ளது.
அதன்படி தெலுங்கானாவில் மே 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் மே 7-ந் தேதி வரை லாக்டவுனை நீட்டிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
லாக்டவுனை தொடர்ந்து நீட்டிப்பது தொடர்பாக மே 5-ல் தெலுங்கானா அமைச்சரவை கூடி மேலும் முக்கிய முடிவுகளை எடுக்கும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதேபோல் அங்கு விதிமுறைகளை தீவிரமாக்க போவதாக அவர் அறிவித்துள்ளார்.
அதன்படி இன்று இரவில் இருந்து தெலுங்கானாவில் ஸ்விக்கீ, சோமேட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரிகளுக்கு காலவரையற்ற தடை விதிப்பதாக அறிவித்துள்ளார். அதேபோல் நாளை நாடு முழுக்க சில இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது. ஆனால் தெலுங்கானாவில் எங்கும் ஊரடங்கு தளர்த்தப்பட மாட்டாது என்று முதல்வர் கே.சி. ஆர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications