அக்னிபாத் போராட்டம்: சாட்டையை சுழற்றிய உபி போலீஸ்! 260 பேர் கைது! அயோத்தியில் 144 தடை
லக்னோ : பீகாருக்கு அடுத்தபடியாக உத்தரபிரதேசத்தில் போராட்டம் உக்கிரமாக நடந்தது. போலீஸ் நிலையத்துக்கு தீவைக்கப்பட்ட நிலையில் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்டதாக 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அயோத்தியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் பாதுகாப்பு படைக்கான ஆள்சேர்ப்பு திட்டமாக அக்னிபாத் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்படைகளில் இளைஞர்கள் குறுகிய காலம் தான் சேவையாற்ற முடியும்.
இதுதொடர்பான அறிவிப்பை முப்படை தளபதிகளுடன் சேர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
விடாதீங்க! டெல்லி போலீஸ் மீது ஓம் பிர்லா, வெங்கையா நாயுடுவிடம் காங்கிரஸ் எம்பிக்கள் சரமாரி புகார்
அக்னிபாத் திட்டம் அறிமுகம்
அதன்படி அக்னிபாத் திட்டத்தின் கீழ் முப்படைகளிலும் 17.5 வயது முதல் 21 வயதுக்குள் பணிக்கு சேரலாம். இவர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருக்கலாம். 4 ஆண்டு பணிக்கு பிறகு 75 சதவீதம் பேர் திருப்பி அனுப்பப்படுவர். 25 சதவீதம் பேர் மட்டும் தக்க வைக்கப்படுவர். தக்க வைக்கப்படும் வீரர்கள் 15 ஆண்டுகள் பணியை தொடரலாம். முதல் ஆண்டு மாத சம்பளமாக ரூ.30 ஆயிரமும், 4வது ஆண்டில் ரூ.40 ஆயிரமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சம்பளத்தில் 30 சதவீத தொகை பங்களிப்பு தொகையாகப் பிடிக்கப்படும். 4 ஆண்டுக்கு பிறகு ராணுவத்தில் இருந்து திரும்பும் வீரர்களுக்கு சான்றுகள் மற்றும் சேவை நிதியாக ரூ.11.71 லட்சம் வழங்கப்படும். இதற்கு வரி விலக்கு உண்டு. ஆனால் இவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது.
இளைஞர்கள் போராட்டம்
இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒப்பந்த பணி போன்று இத்திட்டம் உள்ளதால் ஏராளமானவர்களால் நாட்டுக்கு நீண்டகாலம் சேவையாற்ற முடியாமல் போகலாம்.இதனால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர். எதிர்க்கட்சிகளும் இந்த திட்டத்தை எதிர்த்துள்ளன. பீகார், உத்தர பிரதேசம், ஜார்கண்ட், தெலுங்கானா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. ரயில்கள் தீவைத்து எரிக்கப்படுவதுடன், வாகனங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. ரயில் நிலையங்கள் சூறையாடப்படுகின்றன. இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி, தடியடி நடத்தி வருகின்றன.
உத்தரபிரதேசத்தில் வன்முறை
பீகாருக்கு அடுத்ததாக உத்தரபிரதேசத்தில் போராட்டம் உக்கிரமாக நடந்தது. உத்தர பிரதேச மாநிலத்திலும் 6 மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. அப்போது சில இடங்களிலும் வாகனங்கள், ரயில்களுக்கு தீவைக்கப்பட்டன. வன்முறைகள் அரங்கேறின. ஆக்ரா-நொய்டா எக்ஸ்பிரஸ் சாலையில் மறியல் நடந்தது. டயர்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. ரயில் நிலையம் சூறையாடப்பட்டது. ஜட்டரி போலீஸ் நிலைய கட்டடத்துக்கு தீவைக்கப்பட்டது. மேலும், அலிகாரில் போலீஸ் வானகங்கத்துக்கு தீவைக்கப்பட்டது. கல்வீச்சில் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் போராட்டம் வன்முறையானது.
260 பேர் கைது; 144 தடை
இத்தகைய வன்முறையாளர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி மொத்தம் 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலியா மாவட்டத்தில் 109 பேர், மதுராவில் 70 பேர், அலிகாரில் 30 பேர், வாரணாசி மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் 27 பேர், நொய்டாவில் 15 பேர், ஆக்ராவில் 9 பேர் என கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் நடக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயோத்தியின் மூத்த எஸ்பி சைலேஷ் குமார் பாண்டே 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடும் நடவடிக்கை
இந்நிலையில் உத்தர பிரதேச மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி பிரசாந்த் குமார் கூறுகையில், ‛‛அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவறு செய்யும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என எச்சரிக்கை செய்துள்ளார்.