இதுதான் கடைசி வார்னிங்.. சட்டென நின்ற அஸ்வின்.. உடனே மாறிய முகம்.. மைதானத்தில் நடந்த பரபர சம்பவம்!
சிட்னி: நேற்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக டி 20 போட்டியில் அஸ்வின் செய்த காரியம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
2022 டி 20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று இந்தியா முதல் தோல்வியை பதிவு செய்தது. வரிசையாக இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி நேற்று தோல்வி அடைந்தது.
தென்னப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று நேற்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே பேட்டிங்கில் திணறியது.
அணியில் இருந்து அக்சர் பட்டேல் நீக்கப்பட்டு தீபக் ஹூடா சேர்க்கப்பட்டார்.
உலககோப்பை டி20: பாகிஸ்தான்-ஜிம்பாப்வே ரசிகர்கள் திடீர் மோதல்.. காரணம் மிஸ்டர் பீன்.. ஒரே காமெடி
எத்தனை ரன்கள்
ராகுல் 9, ரோஹித் 15, கோலி 12 என்று வரிசையாக டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். அதன்பின் தீபக் ஹூடா 0, ஹர்திக் பாண்டியா 2 ரன்களுக்கு அவுட் ஆனார்கள். தினேஷ் கார்த்திக் பொறுமையாக ஆடி 15 பந்தில் 6 ரன்கள் மட்டும் எடுத்தார். ஆனால் சூர்ய குமார் யாதவ் மட்டும் இன்னொரு பக்கம் அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்தார். 68 ரன்களை இவர் 40 பந்துகளில் எடுத்தார். இதில் 3 சிக்ஸ், 6 பவுண்டரி அடக்கம்.
தோல்வி
இதனால் இந்திய அணி 133-9 ரன்கள் எடுத்தது. இரண்டாவது பேட்டிங் செய்வது கடினம் என்பதால் இந்திய அணி நம்பிக்கையாக களமிறங்கியது. ஆனால் தென்னாபிரிக்க அணி தொடங்கியதில் இருந்து 3 விக்கெட்டுகளை வரிசையாக இழந்தது. 3 விக்கெட்டுகளை இழந்தாலும் அடுத்து மில்லர், மார்க்கிரம் ஆகியோர் சுதாரித்து ஆட தொடங்கினார்கள். இருவரும் அதிரடியாக அரை சதம் அடித்தனர். இதனால் தென்னாப்பிரிக்க அணி எளிதாக வென்றது. 2 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் இலக்கை அடைந்து தென்னாப்பிரிக்க அணி வென்றது.
வெற்றி
இந்த போட்டியில் அஸ்வின் 18வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் முதல் இரண்டு பந்துகள் சிக்ஸர்கள் சென்றன. இதனால் மூன்றாவது பந்தை மிகவும் கவனமாக வீசினார். இரண்டு பந்துகளை சிக்ஸ் அடித்த மில்லர் மூன்றாவது பந்தில் சிங்கிள் அடித்து நான் ஸ்டிரைக்கர் எண்டிற்கு சென்றார். அப்போது நான்காவது பந்தை அஸ்வின் வீச வந்தார். அவர் பந்தை போடும் முன் மில்லர் ரன் எடுக்க கிரீஸை தாண்டி சென்றார். நான் ஸ்டிரைக்கர் எண்டில் இருந்த அவரை அஸ்வின் நினைத்து இருந்தால் ரன் அவுட் செய்து இருக்க முடியும்.
மன்கட்
இதை முன்பு மன்கட் என்று அழைத்து வந்தாலும் தற்போது சட்டப்படி இது ரன் அவுட்தான். அதாவது நான் ஸ்டிரைக்கர் எண்டில் இருக்கும் வீரர், வீராங்கனை கிரீஸை தாண்டி இருந்தால் அவரை விக்கெட் எடுக்கலாம். முன்பு இந்த விக்கெட்டை எடுத்தால் அது கிரிக்கெட்டின் ஆன்மாவிற்கு எதிரானது என்று விமர்சனங்கள் வைப்பார்கள். அஸ்வின் கூட ஐபிஎல்லில் பட்லர் விக்கெட்டை இப்படி எடுத்து இருக்கிறார். அப்போது அதை கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் நேற்று அஸ்வின் மில்லர் விக்கெட்டை எடுக்கவில்லை.
மில்லர்
மாறாக மில்லருக்கு வார்னிங் கொடுப்பது போல கொடுத்துவிட்டு அங்கிருந்து அஸ்வின் நகர்ந்து சென்றார். வேகமாக பவுலிங் போட வந்து ஒரு நொடி நின்றுவிட்டு, வார்னிங் தருவது போல தந்துவிட்டு அஸ்வின் சென்றார். ஒரு நான் ஸ்டிரைக்கர் கிரீஸில் இருந்து சில மீட்டர்கள் தள்ளி நிற்பது என்பது தவறானது. இதன் மூலம் அவர் கூடுதல் ரன்களை எளிதாக எடுக்க முடியும். சில மீட்டர்கள்தான் என்றாலும்.. பேட்ஸ்மேன் இப்படி நகர்ந்து நிற்பது மிகப்பெரிய தவறு. அதிலும் கடைசி ஓவர்களில் இப்படி நிற்பதன் மூலம் ஆட்டத்தின் போக்கே மாறும் வாய்ப்புகள் உள்ளன.