நான் தம் அடிக்கிற ஸ்டைலைப் பார்த்து.. "குப் குப்"... ஒரு திடீர் தொடர் (7)
ஆமா.. இந்த சிகரெட் குடிக்கும் பழக்கம் எப்படி உருவாகியிருக்கும்.. எவன் கண்டுபிடிச்சிருப்பான் அப்படிங்கிற அதி முக்கியத்துவம் வாய்ந்த சிந்தனை மண்டையைக் குடைந்தது.
மண்டை குடைந்தால் உடனே ஆராய்ச்சியில் இறங்கி விட வேண்டுமே.. அப்படி இறங்கியபோதுதான் சுவாரஸ்யமான பல தகவல்கள் கிடைத்தன.
இந்த ஐரோப்பியர்கள்தான் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு "மாடர்ன் சிகரெட்" பழக்கத்தை கொண்டு போய்ச் சேர்த்து கெட்டு குட்டிச் சுவராக்கியுள்ளனர்.
நாட்டிலேயே முதல்முறை.. சிகரெட், பீடி சில்லறை விற்பனைக்கு மகாராஷ்ராவில் தடை.. பின்னணி!
கஞ்சா புகை
ஆனால் ஐரோப்பியர்களுக்கு முன்பாகவே பல உலக நாடுகளிலும் புகை பழக்கம் இருந்துள்ளது. ஆனால் சிகரெட் என்ற மாடர்ன் புகை பழக்கத்தை ஐரோப்பியர்கள்தான் உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள். அதை விட முக்கியமாக கஞ்சாவை புகைத்து இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்த உலகத்துக்கு புகையிலையை அறிமுகப்படுத்தியதும் அவர்கள்தான்.
போதை வஸ்துக்கள்
அவர்கள் என்னவோ அதை ஒரு பொழுதுபோக்காகத்தான் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் நம்மவர்கள்தான்.. அதாவது நம்மாளுங்கதான் அதை விடாமல் பிடித்துக் கொண்டு வீம்பாக அழிந்து கொண்டுள்ளனர். கஞ்சா, புகையிலை என எல்லாமே ஆரம்பத்தில் மருத்துவ பயன்களுக்காகத்தான் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் நாளடைவில் அவை போதைப் பொருட்களாக மாற்றப்பட்டு விட்டன.
இந்தியாவில் புகை
கிமு 2000மாவது ஆண்டுகளில் இந்தியாவில் புகை பிடிக்கும் பழக்கம் உருவாகியுள்ளது. ஆரம்பத்தில் அவர்கள் புகைத்தது கஞ்சாதான். பொது இடத்தில் கூடி மூட்டம் போடுவது போல புகை மூட்டி அதை நுகர்ந்து வந்துள்ளனர். அப்போதெல்லாம் இப்போது உள்ளது மாதிரி சிகரெட் வடிவில் புகை பிடிக்கும் வழக்கம் இருந்ததில்லை. மொத்தமாக இலையைப் போட்டு கொளுத்தி அதிலிருந்து வரும் புகையைப் பிடித்து இன்பமாக இருந்துள்ளனர்.
புகையிலை
இதே காலகட்டத்தில் பல்வேறு உலக நாடுகளிலும் கஞ்சா புகைப் பழக்கம்தான் இருந்துள்ளது. ஐரோப்பியர்கள்தான் இதிலிருந்து விடுபட்டு சிகரெட்டை இப்போதுள்ள வடிவில் முதலில் இலைகளிலும், பின்னர் தாள்களிலும் சுருட்டி புகைக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் கஞ்சாவை அவர்கள் விட்டு விட்டு புகையிலையை பயன்படுத்தினர். ஐரோப்பியர்கள்தான் புகையிலை மூலம் புகை பிடிக்கும் பழக்கத்தை கண்டறிந்தவர்கள்.
மாடர்ன் சிகரெட்
பிரான்சைச் சேர்ந்த ஜீன் நிகோட் என்பவர்தான் இந்த மாடர்ன் புகை பிடிக்கும் பழக்கத்தை 1500களில் அமல்படுத்தியுள்ளார். இவரது பெயரை வைத்துத்தான் நிகோடின் என்ற பெயர் உருவெடுத்தது என்பது கிளைக் கதை. இவர் அறிமுகப்படுத்திய புகையிலை சிகரெட்டுக்கு பிரான்சிஸ் பெரும் வரவேற்பு கிடைத்தது. அங்கிருந்து அப்படியே இங்கிலாந்துக்கும் இது பரவியது. விதம் விதமான பைப்புகளில் புகையிலையை அடைத்து புகை பிடிக்க ஆரம்பித்தனர் ஐரோப்பியர்கள்.
புகைக்கும் பைப்
பைப் சிகரெட்டில் புகையை இழுத்து மூக்கு வழியாக விடுவதை அந்தக் காலத்தில் ஏதோ பெரிய குறளி வித்தை போல பார்த்து ரசிப்பார்களாம் அக்காலத்து மக்கள். அதிலும் இரண்டு மூக்கு வழியாகவும் கூட்ஸ் வண்டி போல புகை விட்டு சாகசம் செய்வதை அந்தக் காலத்து ஆண்கள் ஒரு ஸ்டைலாக பாலோ செய்துள்ளனராம். அப்படி விடுவோருக்கு பெரும் ரசிகர் கூட்டம் இருக்குமாம். நம்ம ஊர்ப் பக்கம் காதுகளில் புகை விடுவோரை நிறையப் பார்க்கலாம்!
சீனத்து ஓபியம்
ஒவ்வொரு நாட்டிலும் ஒரு மாதிரியான புகை பழக்கம் இருந்துள்ளது. 19வது நூற்றாண்டில் சீனாவில் ஓபியம் புகைக்கும் பழக்கம் தோன்றியது. ஆரம்பத்தில் அதை மருத்துவ குணத்துக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். பின்னர்தான் அதை நுகரும் பழக்கம் உருவாகியுள்ளது. கஞ்சா, புகையிலை போல ஓபியமும் இப்போது உலகம் முழுவதும் ஒரு போதை வஸ்தாக மாறிப் போயிருக்கிறது.
தமிழ்நாட்டில் எப்படி பரவுச்சு!
தமிழ்நாட்டில் எப்படி புகைப் பழக்கம் ரொம்ப ஸ்பீடாக பரவியது என்று சொன்னால்.. வேண்டாம்.. அதைச் சொன்னால் சிலர் கோச்சுக்கக் கூடும்.. எது எப்படியோ.. நாம எதைப் புகைத்தாலும், எப்படிப் புகைத்தாலும் எல்லாமே உடல் நலனுக்கு கேடுதான்.. ஸோ.. எது கையில் இருந்தாலும் அதை அப்படியே தூரப் போட்டுட்டு ஜம்முன்னு ஹெல்த்தியா வாழப் பழகிக்கிங்க.. !
(தொடரும்)