For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒன் + ஒன் = ஜீரோ : அத்தியாயம் 30

By Shankar
Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

கதை, இதுவரை...

வேளச்சேரி ரயில் நிலையத்தில் கோரமாய் வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகை நிருபர் சுடர்கொடி வழக்கில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் வட சென்னை போகிறார்கள். ஜெபமாலையைச் சந்திக்கிறார்கள். ஆனால் திடீரென அவளைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்த்துவிட்டு, அவள் தந்த குறிப்புடன் கொலையாளியைத் தேடிப் புறப்படுகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். கொலையாளி தரப்பிலிருந்து எச்சரிக்கை வருகிறது. சுடர்கொடி வழக்கை அவசரஅவசரமாக முடிக்க ஜெயவேல் என்ற ஒரு அப்பாவியைக் கைது செய்து கேஸை முடிக்கும் திட்டம் தெரிய வருகிறது. உண்மை குற்றவாளியைப் பிடிக்க வளையோசை ஆசிரியர் மீனலோசனியைச் சந்திக்கப் போகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அப்போது வானதி என்ற பெண் ஒரு முக்கியத் தடயம் தருகிறாள். அந்தத் தடயம் அவர்களை நொளம்பூர் நோக்கிச் செல்ல வைக்கிறது. அங்கே அரசின் இளம் சிறார் குற்றவாளிகள் இல்லத்தில் விசாரணையைத் தொடர்கிறான் விவேக்.

இனி...

அப்சர்வேடிவ் ஆபீஸர் சச்சிதானந்தத்தின் செல்போன் டயல் ஸ்க்ரீனில் ஆசிர்வாதம் என்ற பெயரைப் பார்த்ததும் விவேக் தன் சகல அவயங்களிலும் ஜாக்கிரதையானான்.

Rajeshkumars crime thriller One + One = Zero - 30

'ஜெபமாலை சொன்ன அந்த 'ஹாசீர்வாதம்' ஏன் ஆசிர்வாதமாய் இருக்கக் கூடாது...?'

சச்சிதானந்தம் செல்போனை கையில் எடுத்துக் கொண்டே விவேக் ஏறிட்டார். "எக்ஸ்க்யூஸ்மீ... ஒரு போன் கால் வருது !"

"நோ ப்ராப்ளம். பேசுங்க... மிஸ்டர் சச்சிதானந்தம்".

சச்சிதானந்தம் செல்போனின் டயல் ஸ்கிரீனை தேய்த்து விட்டு காதுக்கு ஏற்றி "வணக்கம் ஃபாதர்...," என்றார்.

"..............."

"எல்லாம் நல்லபடியாய் போயிட்டிருக்கு ஃபாதர் பசங்க யாரும் இப்ப பிரச்சனை பண்றது இல்லை...."

"..............."

டகிறிஸ்துமஸ் செலிபரேஷன்தானே.... நல்லபடியாய் பண்ணிடலாம் ஃபாதர். பசங்களுக்குப் பிடிச்ச மாதிரி ஒரு வி.ஐ.பி கலந்துகிட்டா ஃபங்க்‌ஷன் சிறப்பாய் இருக்கும்....!"

"..............."

"தேங்க்யூ ஃபாதர்..... அந்த பொறுப்பை நான் எடுத்துக்கறேன்....." என்று சொன்ன சச்சிதானந்தம் மேலும் இரண்டு நிமிடங்கள் ஹோமைப் பற்றி பொதுவாய் பேசிவிட்டு செல்போனை அணைத்தார். விவேக்கை ஏறிட்டபடி சொன்னார்.

"ஸாரி ஸார் ... நாம ஏதோ பேசிட்டிருந்தோம். அதுக்குள்ள ஒரு முக்கியமான போன். ஸ்கிப் பண்ண முடியலை...."

"இஃப் யூ டோண்ட் மைண்ட்... நீங்க இப்ப பேசிகிட்டு இருந்த நபர் ஒரு ஃபாதர்தானே ?"

"ஆமா ஸார்"

"அவர் பேரைத் தெரிஞ்சிக்கலாமா..?"

"தாரளமாய்... அவர் பேரு ஞானகடாட்சம்"

விவேக் லேசாய் முகம் மாறினான்.

"என்னது ஞானகடாட்சமா...?"

"ஆமா.... ஸார்"

"அப்படீன்னா .... ஆசீர்வாதம் யாரு ?"

சச்சிதானந்தம் புருவங்களை உயர்த்தினார். "என்னோட செல்போனின் டிஸ்ப்ளேயில் 'ஆசீர்வாதம்'ன்னு வந்ததை பார்த்துட்டு கேட்கறீங்கன்னு நினைக்கிறேன்".

"அதே தான்...."

"ஸார் ! 'ஆசீர்வாதம்'ங்கிறது ஒரு ஹாஸ்பிடலோட பேரு.... ஃபாதர் ஞானகடாட்சம்தான் அந்த ஹாஸ்பிடலோட நிர்வாகப் பொறுப்பாளர். நான் அவரோட செல்போன் நம்பரை ஆசிர்வாதம் என்கிற பேர்ல சேவ் பண்ணி வெச்சிருக்கேன்.'

"அந்த ஆசிர்வாதம் ஹாஸ்பிடல் எங்கே இருக்கு?"

"ஈச்சம்பாக்கத்துல இருக்கு ஸார் ...."

"அது எது மாதிரியான ஹாஸ்பிடல் ?"

"ஸார்... அது ஒரு கிறிஸ்டியானிடி ஹாஸ்பிடல். ஏழைகளுக்கு அங்கே இலவசமாய் வைத்தியம் பார்ப்பாங்க".

"ஞானகடாட்சத்துக்கு ஜெபமாலையைத் தெரியுமா ?"

"நல்லாவே தெரியும் ஸார்...."

"நீங்க அந்த ஆசீர்வாதம் ஹாஸ்பிடலுக்கு போயிருக்கீங்களா ?"

"ஒரு தடவை போயிருக்கேன் ஸார்"

"ஜெபமாலை அந்த ஹாஸ்பிடலுக்கு போறது உண்டா ?"

"அது எனக்குத் தெரியாது ஸார்"

"சரி... நீங்க ஒரு தடவை அந்த ஹாஸ்பிடலுக்கு போறதாய் சொன்னீங்க... எதுக்காக போனீங்க...?"

"இந்த விடுதியில் ஒரு பையனுக்கு ஹார்ட் ப்ராப்ளம் இருந்தது ஸார். கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் அல்ட்ராசானிக் ஸ்கேன் வசதி இல்லாததால அந்தப் பையனைக் கூட்டிகிட்டு ஆசீர்வாதம் ஹாஸ்பிடலுக்குப் போனேன்...!"

"நீங்க சொல்றதை வெச்சுப் பார்க்கும் போது அந்த ஆசீர்வாதம் ஹாஸ்பிடல் ஒரு மல்டி ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடலாய் இருக்கும் போலிருக்கே ?"

"ரொம்பவும் பெரிய ஹாஸ்பிடல்ன்னு சொல்ல முடியாது ஸார். ஓரளவுக்கு இருக்கும். பை....த...பை அந்த ஹாஸ்பிடலைப் பற்றி எதுக்காக ஸார் இப்படியொரு விசாரணை..?"

விவேக் தன்னுடைய இரண்டு முழங்கைகளையும் மேஜையின் மேல் ஊன்றிக் கொண்டு குரலைத் தாழ்த்தினான்.

"இதோ பாருங்க.... சச்சிதானந்தம்....! இன்னிக்குத் தான் உங்களை முதல் தடவையாய் பார்க்கிறேன். என்னோட கணிப்பில் நீங்க ஒரு தப்பான நபராய் இருக்க மாட்டீங்க என்கிற நம்பிக்கையில் உங்க கிட்டே சில விஷயங்களை ஷேர் பண்ணிக்கப் போறேன். ஒருவேளை நீங்க தப்பான நபராய் இருந்துட்டா.... இப்பவே எல்லா உண்மைகளையும் சொல்லிடறது உத்தமம். பின்னாடி நீங்க ஒரு தப்பான நபர்னு தெரிய வந்தா சட்டம் மூலமாய் உங்களுக்கு கிடைக்கப் போகிற தண்டனை ரெண்டு மடங்கு அதிகமாய் இருக்கும்..."

விவேக் இப்படி சொன்னதும் சச்சிதானந்தம் தான் உட்கார்ந்த இடத்தில் இருந்தே பதறினார்.

"ஸார்.... நீங்க இங்கே வந்ததிலிருந்தே என்னோட மனசுக்குள்ளே ஒரு பயம். ஏதேதோ கேள்விகளைக் கேட்டு விசாரணை பண்ணிட்டு இருக்கீங்க... இதெல்லாம் எதுக்காகன்னும் எனக்குத் தெரியாது. ஒரு நிமிஷத்துக்கு முன்னாடி நீங்க 'நான் ஒரு தப்பான நபராய் இருக்க மாட்டேன்னு' சொன்னீங்க. அந்த வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை. நான் தஞ்சாவூக்குப் பக்கத்தில் இருக்கிற நற்குடி கிராமத்தில் பிறந்தவன். ஆச்சாரமான குடும்பம். விளையாட்டுக்கு பொய் பேசினா கூட என்னோட அம்மா அப்பாவுக்கு பிடிக்காது. எண்ணெய் போட்டு தடவின பிரம்பை எடுத்து அப்பா விளாசி தள்ளிடுவார். எம்.ஏ. சோசியாலஜியையும், சைக்காலஜியையும் எடுத்து படிச்சு முதல் வகுப்பில் பாஸ் பண்ணி பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி இந்த ஜுவனைல் அப்சர்வேடிவ் போஸ்டிங்குக்கு வந்தேன். இருபது வருஷ சர்வீஸ், இதுவரைக்கும் மூணு ஊரு மாறிட்டேன். என்மேல எந்த ஒரு ரிமார்க்கும் கிடையாது. நான் இப்போ பார்த்துட்டிருக்கிறது வேலை இல்லை ஸார். ஒரு மகத்தான சமுதாயப் பணி. தெரிஞ்சோ தெரியாமலோ குற்றங்களை பண்ணிட்டு இந்த சிறார் விடுதிக்கு வர்ற பையன்களை நல்வழிப்படுத்துறதுதான் என்னோட வேலை..."

அதுவரைக்கும் ஒன்றும் பேசாமல் இருந்த விஷ்ணு கேட்டான்.

"அப்படி உங்களால அவங்களை நல்வழிப்படுத்த முடியுதா ?"

"ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வரை அப்படியொரு பாஸிட்டிவ்வான நிலைமை இருந்தது. ஆனா, இப்போ அப்படியில்லை"

"காரணம் ?"

"இன்றைய தலைமுறை தேவையில்லாத பழக்கங்களுக்கு அடிமையாகி சிந்திக்கும் திறனை இழந்து தவறான வழிக்குப் போய் குற்றவாளிகளாய் மாறிகிட்டு இருக்காங்க. இந்த விடுதிக்கு வரும்போதே கடுமையான குற்றங்களை பண்ணிட்டுத்தான் வர்றாங்க. அப்படி பட்டவங்களையெல்லாம் திருத்தறது அவ்வளவு சுலபம் இல்லை."

"இப்போ இந்த விடுதியில் எத்த்னை பேர் இளம் குற்றவாளிகளாய் இருக்காங்கன்னு சொன்னீங்க?"

"மொத்தம் 57 பேர்"

"நாங்க இந்த விடுதிக்குள்ளே வந்த போது கல்லில் சுற்றப்பட்ட காகிதம் ஒண்ணு எங்க முன்னாடி வந்து விழுந்தது. அந்த காகிதம் ஒரு கடிதம். அதை வீசியது யார்ன்னு தெரியாது. உங்ககிட்டே கேட்டபோது இது மாதிரியான கல்லால் சுற்றப்பட்ட கடிதங்கள் கடந்த ஆறூமாச காலத்தில் முக்கியமான பிரமுகர்கள் அந்த விடுதிக்கு வரும்போது வீசப்பட்டிருந்ததாய் சொன்னீங்க இல்லையா?"

"ஆமா ஸார்"

"அதை ஏன் நீங்க ஒரு பெரிய விஷயமாய் எடுத்துக்கலை?"

"நான் அப்த விஷயத்தை சீரியஸாய் எடுத்துட்டு ஒரு விசாரணையை மேற்கொண்டேன் ஸார். ஆனா அந்த விசாரணைக்கு எந்த ஒரு பலனும் கிடைக்கலை."

விவேக் இப்போது குறுக்கிட்டான்.

"சரி..... அந்த கல்கடிதத்தை எடுத்து மறூபடியும் ஒரு தடவை படிச்சுப் பாருங்க"

"படிச்சுப் பார்க்கவே வேண்டியது இல்லை ஸார். எனக்கு அந்த வாசகங்கள் மனப்பாடமாகவே இருக்கு . சொல்லட்டுமா?"

"சொல்லுங்க...."

"எங்களுக்கத் தேவை நீதி விசாரணை. மூன்று மாதத்திற்கு ஒரு முறை நான்கைந்து பேர் தப்பித்துப் போய்விடுகிறார்கள். ஆனால், யாரும் பிடிபட்டு மீண்டும் இங்கு வருவது இல்லை. இந்தச் சிறை என்ன செய்கிறது."

"இந்த கடிதத்தை வீசினது யார்ன்னு உங்களுக்கு தெரியலை. அதாவது கண்டுபிடிக்க முடிலை..?"

"ஆமா ஸார்..."

"அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டு இருப்பது உண்மையான வாசகங்கள்தானா?"

"உண்மைதான் ஸார். மூணு மாசத்துக்கு ஒரு தடவை இந்த விடுதியிலிருந்து நாலைஞ்சு பசங்களாவது தப்பிச்சுப் போயிடறாங்க. ஆனா அவங்கள்ள யாருமே பிடிபடறது இல்லை..."

"ஒருத்தர் கூடவா பிடிபடலை ...?"

"பிடிபடலை ஸார்..., எனக்கும் அதுதான் ஆச்சர்யம்"

"அது ஆச்சர்யம் இல்லை சச்சிதானந்தம். அது ஓரு அசாதரணமான ஆபத்தான விஷயம்"

"ஸார் ! நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியலை....!"

"வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனுல் வெட்டி கொலை செய்யப்பட்ட சுடர்கொடியின் மரணத்துக்கும், இந்த ஜுவைனல் இளம் சிறார் குற்றவியல் விடுதிக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருக்கு"

சச்சிதானந்தத்தின் முகம் மாறியது.

"அ.... அ அது..... எப்படி ஸார்....?"

"இந்த கல் கடிதத்தை வீசியது யார் என்று உங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லைதானே ?"

"ஆமாம் ஸார்"

"இன்னும் பத்தே நிமிஷத்தில் அது யார் என்று உங்களுக்கு தெரியும்," சொன்ன விவேக்கை சச்சிதானந்தம் மட்டுமல்ல விஷ்ணுவும் ஒரு மெகா வியப்போடு பார்த்தான்.

[First Part, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ,21, 22, 23, 24, 25, 26, 27,28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, Last Part]

English summary
30th Chapter of Rajeshkumar's crime series One + One = Zero.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X