For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜேஷ்குமாரின் 'ஒன் + ஒன் = ஜீரோ': அத்தியாயம் 23

By Shankar
Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

கதை, இதுவரை...

வேளச்சேரி ரயில் நிலையத்தில் கோரமாய் வெட்டிக் கொல்லப்பட்ட பத்திரிகை நிருபர் சுடர்கொடி வழக்கில் முக்கிய ஆதாரமான ஜெபமாலையைத் தேடி விவேக்கும் விஷ்ணுவும் பழைய வண்ணாரப்பேட்டையின் துர்நாற்றச் சந்துகளில் நுழைகிறார்கள்... ஒருவழியாய் ஜெபமாலையைச் சந்தித்துவிடுகிறார்கள். அப்போது அவள் ஒரு செல்போன் வீடியோ காட்டுகிறாள். கொலைகாரன் குறித்த ஒரு முக்கியக் குறிப்பை அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ரத்த வாந்தி எடுக்கிறாள். அவளை மருத்துவனையில் விஷ்ணு சேர்க்க, அவளுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்த குற்றவாளி கிருஷ்ணன் சிக்குகிறான். மருத்துவமனையிலிருக்கும் ஜெபமாலையைக் கொல்ல நர்ஸ் வேடத்தில் ஒரு பெண் வந்து, தப்பிக்கிறாள். வழக்குத் தொடர்பாக கமிஷனரைச் சந்திக்கச் செல்கிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும். அங்கே விவேக்குக்கு கொலையாளி தரப்பிலிருந்து எச்சரிக்கை வருகிறது. இடையில் தியோடர் போன். அதில் சுடர்கொடி வழக்கை அவசரஅவசரமாக முடிக்க ஜெயவேல் என்ற ஒரு அப்பாவியைக் கைது செய்து கேஸை முடிக்கும் திட்டம் தெரிய வருகிறது. உண்மை குற்றவாளியைப் பிடிக்க வளையோசை ஆசிரியர் மீனலோசனியைச் சந்திக்கப் போகிறார்கள் விவேக்கும் விஷ்ணுவும்.

இனி...

விவேக் சொன்னதைக் கேட்டு தனக்கு பின்பக்கம் இருந்த சுவரைத் திரும்பிப் பார்த்தாள் மீனலோசனி.

சுவரில் இருந்த கிராஃப்ட் போர்டில் அந்த போஸ்டர் குண்டூசிகளின் உதவியால் பொருத்தப்பட்டு பார்வைக்குக் கிடைத்தது. அவள் உதட்டில் ஒரு சின்ன புன்னகை அரும்பியது.

"அது ஒரு விளம்பர போஸ்டர். சுடர்கொடி ஒரு கட்டுரைத் தொடரை எழுத ஆசைப்பட்டா. அந்தக் கட்டுரைக்கான விளம்பர மாதிரி போஸ்டர் இது. போஸ்டர்களை பிரிண்ட் பண்ணலை. அதுக்குள்ளே சுடர்கொடிக்கு இப்படியொரு கோர மரணம்."

Rajeshkumars crime thriller One + One = Zero - 23

"சுடர்கொடி எழுத இருந்தது எது மாதிரியான கட்டுரை?"

"அது எனக்குத் தெரியாது."

"ஒரு பத்திரிக்கைக்கு ஆசிரியராய் இருக்கிற நீங்க சுடர்கொடி எதுமாதிரியான கட்டுரையை எழுதப் போறான்னு தெரிஞ்சுக்க வேண்டாமா?"

"அதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணலாம்ன்னு சொல்லியிருந்தா... இஷ்யூ முடிக்கற வேலை இருந்ததால என்னால சுடர்கொடியை மீட் பண்ண முடியலை....!"

"இட்ஸ் ஓகே மேடம்... அந்த விளம்பரத்தில் இருக்கிற வாசகங்கள் எல்லாமே சுடர்கொடியால் எழுதப்பட்டவையா....?"

"ஆமா...!"

"அந்த விளம்பர வாசகங்களை ஒரு தடவை வாய்விட்டு படிங்க மேடம்....!"

மீனலோசனி தன்னுடைய ரிவால்விங் நாற்காலியில் ஒரு அரைவட்டம் சுழன்று அந்த போஸ்டரை மேற்பார்வைப் பார்த்தாள். பிறகு மெதுவாய் வாய்விட்டுப் படிக்க ஆரம்பித்தாள்.

இன்றைய அரும்புகள் நாளை நிச்சயம்
பூக்களாய் மாறும்.
இது இயற்கையின் நியதி.
ஆனால்- நம் சமுதாயச் செடியில் உள்ள
சில அரும்புகள் அவிழ்ந்து பூக்களாய்
மாற அடம் பிடிக்கின்றன.
காரணம்... அவை இரும்பு அரும்புகள். அந்த மென்மையான
அரும்புகள் இரும்புகளாய் மாற-
யார் காரணம்?
எது காரணம்?
தெரிந்து கொள்ள அடுத்த இதழில் இருந்து....
சுடர்கொடி எழுதப்போகும்
'கோணல் கோடுகள்'
கட்டுரைத் தொடரைப் படியுங்கள். இது ஒரு அதிரடி தொடர்.
சுடர்கொடி எழுதப்போகும் தொடரின் ஒவ்வொரு வார்த்தையும் ஓர் கூர் ஈட்டிக்கு சமம்.
இந்த கூர் ஈட்டிக்கு குறுமதியாளர்களின் நோக்கம் இரையாகி பலியாகும் என்பது சர்வ நிச்சயம்.

மீனலோசனி அந்த விளம்பர வாசகங்களைப் படித்துவிட்டு விவேக்கை ஏறிட்டுப்பார்த்தாள்.

"இந்த போஸ்டரில் எனக்கு எதுவும் அப்நார்மலாய் இருக்கிற மாதிரி தோணலையே? சுடர்கொடி இதுவரைக்கும் வளையோசைப் பத்திரிகையில் நான்கைந்து கட்டுரைத் தொடர்களை எழுதியிருக்கா. அந்தத் தொடர்களுக்கான விளம்பரங்கள் எல்லாமே இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கொண்டதாய்த்தான் இருக்கும்."

"அந்தத் தொடர்கள் எழுதும்போது சுடர்கொடிக்கு ஏதாவது மிரட்டல் கடிதங்கள் வந்ததா?"

"இல்லை...?"

"ஆனா.... இந்த 'கோணல் கோடுகள்' தொடரை சுடர்கொடி எழுதவே ஆரம்பிக்கவில்லை. விளம்பர போஸ்டர்க்கான மாதிரி மட்டுமே தயாரிக்கப்பட்ட நிலையில் அவள் கொலை செய்யப்பட்டு இருக்கிறாள். இது உங்களுக்கு நெருடலாக இல்லையா...?"

"ஸாரி ஸார்... நீங்க நினைக்கிற மாதிரி சுடர்கொடி கொலை செய்யப்பட்டதற்கும், அவள் எழுத இருந்த இந்த 'கோணல் கோடுகள்' கட்டுரைத் தொடர்க்கும் எந்தவிதமான சம்பந்தமும் இருக்காதுன்னுதான் என்னோட மனசுக்குப் படுது!"

"நோ மேடம்... யூ ஆர் ராங்.... சம்பந்தம் இருக்கு. ஜெபமாலை சொன்ன வார்த்தைகளில் முதல் வாக்கியம் என்ன?"

"குர் நோக்கம்"

"விளம்பர போஸ்டர் மாதிரியில் இருக்கும் கடைசி அந்த நாலு வரிகளை மறுபடியும் படியுங்கள் மேடம்"

மீனலோசனி சற்றே எரிச்சலோடு படித்தாள். "சுடர்கொடி எழுதப்போகும் தொடரின் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கூர் ஈட்டிக்கு சமம். இந்த கூர் ஈட்டிக்கு குறுமதியாளர்களின் நோக்கம் இரையாகி பலியாகும்....!"

விவேக் குரலைத் தாழ்த்தினான்.

"ஏதாவது பிடிபடுதா மேடம்?"

"லேசா"

"என்னான்னு சொல்லுங்க பார்ப்போம்"

"கூர் ஈட்டி, குறுமதியாளர்களின் நோக்கம். இந்த இரண்டு வார்த்தைகளோட சுருக்கம்தான் அந்த குர் நோக்கம்"

"அப்படீன்னா குர் நோக்கம் என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்?"

"ஸாரி ஸார் தெரியலை....!"

"இட்ஸ் ஓ.கே. மேடம்.... இந்த பத்திரிக்கை ஆபீசில் சுடர்கொடிக்குன்னு ஏதாவது ஒரு அறை கொடுத்து இருந்தீங்களா?"

"ஆமா.... முதல் மாடியில் ரெண்டாவது ரூம். ஏதாவது அவசரமாய் கட்டுரை எழுத வேண்டி வந்தால் சுடர்கொடி அந்த அறையைத்தான் 'யூஸ்' பண்ணுவா.... ஆனா பெரும்பாலான நேரம் வெளியில்தான் இருப்பா."

"நான் அந்த ரூமைப் பார்க்கலாமா மேடம்?"

"ப்ளீஸ்....கம்.....!"

மீனலோசனி எழுந்தாள்.

அவள் முன்னால் போய்க் கொண்டிருக்க விஷ்ணு விவேக்கின் காதருகே கிசுகிசுத்தான்.

"பாஸ்"

"சொல்லு"

"இந்த மீனலோசனி கிட்டே ஏதோ தப்பு இருக்கு"

"என்ன தப்பு?"

"எதையோ மறைக்கறாங்க.... 'குர் நோக்கம்'ன்னா என்னான்னு இந்த அம்மாவுக்குத் தெரிஞ்சிருக்கு. ஆனா தெரியாத மாதிரி நடிக்கறாங்க....!"

"இல்ல விஷ்ணு உன்னோட கெஸ் ஒர்க் தப்பு. அந்தம்மாவுக்கு எதுவும் தெரியாது. சுடர்கொடி எழுதவிருந்த 'கோணல் கோடுகள்' தொடர் கட்டுரை வெளியே இருக்கிற யாரோ சிலர்க்குப் பிடிக்கவில்லை... நாம கண்டுபிடிக்க வேண்டியது அவங்களைத்தான்...."

"அது எப்படி பாஸ் நான் எதை கெஸ் பண்ணினாலும் அதை தப்புன்னு சொல்லிடறீங்க....."

"நீ எதையுமே சரியாய் கெஸ் பண்ணமாட்டேன்னு உனக்கே தெரியுமே?"

"பாஸ்.... இது இன்ஸல்ட்டின் உச்சபட்சம். நான் இதை மேலிடத்தோட கவனத்துக்கு கொண்டு போறேன்"

"ஏடிஜிபி கிட்டே போறியா.... இல்ல டிஜிபி கிட்டேயே போறியா?"

"அதுக்கும் மேலே"

"அதுக்கும் மேல யாருடா?"

"ரூபலா மேடம்....!" விஷ்ணு சொல்லிக் கொண்டிருக்கும்போதே மீனலோசினி முதல் மாடியில் ஏறி அந்த அறைக்கு முன்பாய் நின்றபடி குரல் கொடுத்தாள்.

"இதான் ஸார் சுடர்கொடியோட ரூம்"

விவேக்கும் விஷ்ணுவும் உள்ளே நுழைந்தார்கள்.

சிறிய அறை. சுவரோரமாய் ஒரு மேஜையும் நாற்காலியும் லேசான தூசு படலத்தோடு தெரிந்தது. மேஜையின் இழுப்பறையைத் திறந்து பார்க்க உள்ளே அடைசலாய் காகிதங்கள். நிறம் நிறமாய் பேனாக்கள்.

மீனலோசனி சொன்னாள்.

"இது எல்லாமே சுடர்கொடி 'வளையோசை' பத்திரிகைக்காக பிரத்யேகமாய் எழுதிய கட்டுரைகளோட நகல்கள் ஸார்"

"விஷ்ணு.... எல்லாத்தையும் கிளறு. ஏதாவது உபயோகப்படற மாதிரி இருந்தா அதை மட்டும் வெளியே எடு!"

விஷ்ணு ட்ராயரை முழுவதுமாய் இழுத்து பரபரவென்று கிளறிப் பார்த்துக் கொண்டிருக்க, விவேக் சுவரில் பொருத்தப்பட்டு இருந்த செல்ஃப்பை நோக்கிப் போனான்.

மேல் அடுக்கு முழுவதும் வரிசையாய் புத்தகங்கள்.

ஒவ்வொன்றாய் எடுத்துக் பார்த்தான்.

நானும் என் நிழலும் - கவிதைத் தொகுப்பு.
கனவுகள் இங்கே விற்கப்படும் - சிறுகதைத் தொகுப்பு.
சூரியன் உதிக்காத நாட்கள் - சட்டர்ஜி நாவலின் தமிழாக்கம்.
விவேகானந்தரின் சொற்பொழிவுகள்.

விவேக் ஒவ்வொரு புத்தகமாய் எடுத்துப் பார்க்க எல்லாமே இலக்கியம் ததும்பும் புத்தகங்கள்.

பத்தாவது புத்தகமாக அந்த கனமான புத்தகம் விவேக்கின் கைக்குக் கிடைத்தது. சிவப்பு நிறத்தில் காலிகோ பைண்ட் செய்யப்பட்ட புத்தகம். தலைப்பைப் படித்தான்.

ஸ்ரீ அஷ்ட வராஹி கால பைரவி
மகா மந்திரம்.

கண்களில் வியப்பு பரவ புத்தகத்தின் முதல் பக்கத்தைப் புரட்டினான் விவேக்.

முதல் பக்கமே எச்சரித்தது.

இந்தப் புத்தகத்தை முழுவதுமாய் படிக்கும் முன்பு குளித்து விட்டு சுத்தமாய் வரவும்.

மது அருந்திவிட்டோ, புகை பிடித்துக் கொண்டோ
இந்தப் புத்தகத்தைப் படிக்கக் கூடாது.

எல்லாவற்றுக்கும் மேலாக பெண்கள் அந்த மூன்று நாட்களில் இந்தப் புத்தகத்தைத் தொடவே கூடாது.

மேற்கண்ட எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்துபவர்கள் தங்கள் ஆயுளில் மூன்றில் ஒரு பங்கு நாட்களை இழப்பார்கள்.

புத்தகத்தின் அடுத்த பக்கத்தைப் புரட்டலாமா வேண்டாமா என்று ஒரு வினாடி யோசித்துவிட்டு இரண்டாவது வினாடியில் மெல்லப் புரட்டினான் விவேக்.

[First Part, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ,21, 22, 23, 24, 25, 26, 27,28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, Last Part]

English summary
The 23rd Chapter of Rajeshkumar's crime series One + One = Zero.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X