உ.பி.சட்டசபை தேர்தல்: அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி ராஷ்டிரிய லோக் தள் கட்சியுடன் கூட்டணி
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி ராஷ்டிரிய லோக் தள் கட்சியுடன் கூட்டணி அமைப்பது உறுதியாகி உள்ளது. இரு கட்சிகளிடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையும் தொடங்கி உள்ளது.
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்டவை பிரதான பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவில்லை.
விவசாய போராட்டம் பற்றி தவறான செய்தி.. Zee Newsன் 3 வீடியோக்களை டெலிட் செய்ய என்பிடிஎஸ்ஏ உத்தரவு
அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி சிறிய கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அகிலேஷ் யாதவும், ராஷ்டிரிய லோக் தள் தலைவர் ஜெயந்த் சவுத்ரியும் தங்களது ட்விட்டர் பக்கங்களில், கூட்டணி அமைப்பதை உறுதி செய்து இருவரும் சந்தித்து கை குலுக்கிய படங்களை பகிர்ந்துள்ளனர்.
முலாயம்சிங் அழைப்பு
இதன் மூலம் சமாஜ்வாதி கட்சி- ராஷ்டிரிய லோக் தள் கூட்டணி உறுதியாகி உள்ளது. இரு தலைவர்களும் லக்னோவில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம்சிங் யாதவ், ஊழல், வேலைவாய்ப்பின்மை, பணவீக்க விகிதம், நாட்டின் வளர்ச்சிக்காக அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். சமாஜ்வாதி கட்சி ஏற்பாடு செய்திருந்த புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில், இடதுசாரிகள், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசுகையில்தான் அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் முலாயம்சிங் யாதவ்.
இரட்டை என்ஜின் அரசு
இதனிடையே பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, கான்பூரில் மண்டல பாஜக அலுவலகத்தை திறந்துவைத்தார். மேலும் 7 மாவட்ட பாஜக அலுவலகங்களையும் ஜே.பி.நட்டா இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜே.பி.நட்டா, உ.பி.யில் இரட்டை என்ஜின் கொண்ட அரசாங்கம் செயல்படுகிறது. மத்தியில் பிரதமர் மோடி, மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் இரட்டை என்ஜின்களுடன் இந்த அரசு செயல்படுகிறது. இதன் மூலம் உ.பி. மாநிலம் அபரிதமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றார்.
ஓவைசி மீது யோகி அட்டாக்
இதே நிகழ்ச்சியில் பேசிய உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத், உ.பி. தேர்தலில் போட்டியிடும் மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஓவைசி, சமாஜ்வாதி கட்சியின் ஏஜெண்ட்டாக செயல்படுகிறார். மக்களை உணர்வுப்பூர்வமாக தூண்டிவிட்டுப் பார்க்கிறார் ஓவைசி. ஆனால் உ.பி. முன்னேறிய மாநிலம். இந்த மாநிலத்தில் மதரீதியான வன்முறைகளை நிகழ்த்த முடியாது என்றார். பின்னர் ஜே.பி.நட்டாவும் யோகி ஆதித்யநாத்தும் குருத்வாராவுக்கு சென்று பிரார்த்தனை செய்தனர்.
புதிய விமான நிலையத்துக்கு அடிக்கல்
மேலும் நாளை மறுநாள் உ.பி.யில் நொய்டா சர்வதேச விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். இதன் மூலம் 5 சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட மாநிலமாக உ.பி. மாறியுள்ளது. அண்மையில் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.