Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“நோ... நோ... வீடியோவை ஆஃப் பண்ணுங்க“ ​- ப்ளாட் நெம்பர் – 144 அதிரா அப்பார்ட்மெண்ட் (42)

Subscribe to Oneindia Tamil

-ராஜேஷ்குமார்

அந்த நபரின் கையில் இருந்த கூலிங் கண்டெய்னரை காமிரா "க்ளோஸ் அப்"பில் காட்ட அவர் தொடர்ந்து பேசினார்.

" இந்த கூலிங் கண்டெய்னரில் இருப்பது ஒரு ரசாயனப்பொருள் என்று சொன்னேன். பொதுவாக ரசாயனப்பொருள்கள் எல்லாம் தூளாகவோ, மாத்திரை வடிவிலோ அல்லது திரவ நிலையிலோ இருக்கும். ஆனால் இந்த ரசாயனப்பொருள் மட்டும் எப்படியிருக்கிறது என்பதைப் பாருங்கள் "

சொன்னவர் அந்த கண்டெய்னரைத் திறந்து உள்ளேயிருந்த ஒரு சிறிய பாட்டிலை எடுத்து சதுரமான ஒரு ப்ளாஸ்டிக்தட்டில் கவிழ்த்தார். கடுகைக்காட்டிலும் சற்று பெரிய அளவில் பழுப்பு நிறத்தில், ஜெல்லால் ஆன சிறு சிறு உருண்டைகள், கண்ணாடி போல் பளபளத்து உருண்டன. வீடியோ காமிரா அந்த உருண்டைகளை "க்ளோஸ் அப்"பில் ஜூம் செய்து காட்ட, அதன் பின்னணியில் பேச்சுக்குரல் கேட்டது.

" இந்த ரசாயனப்பொருளின் பெயர் ஜெல்பால் ப்ளாஸ்டர் (GEL BALL BLASTER) இதற்கு இருக்கிற இன்னொரு செல்லப்பெயர் "ஸ்டெப் மதர்ஸ் லைஃப் ஃப்ளஷ்". இந்த ரசாயன உருண்டைகளை தீவனத்தோடு கலந்து கால்நடைகளுக்கு கொடுத்து விட்டால் அவை சாப்பிட்ட ஐந்து நிமிட நேரத்தில் உணர்வற்று சாய்ந்துவிடும். காரணம் அவைகளின் உடம்பில் திடீரென்று ரத்தம் உறைந்து போவதுதான். இப்படியொரு அதிரடியான ரத்த உறைவு ஏற்படுவதற்காக அந்த பளபளப்பான ஜெல்பால் ப்ளாஸ்டர் உருண்டைகளில் ஃபைபிரினோஜன், ப்ரோத்ரோம்பின் போன்ற நொதிகள் குறிப்பிட்ட சதவீதத்திற்கும் அதிகமான அளவில் கலக்கப்பட்டிருக்கும். கால்நடைகள் உணர்வற்று சாயும்போது அவைகளுக்கு ஒரு சிறிய வலி கூட இருக்காது. இந்த உணர்வற்ற நிலை இருக்கும்போதே ஸ்லாட்டரிங் நடந்துவிடும். தொடர்ந்து வீடியோவைப் பாருங்கள் புரியும்....... "

வாஹினி முகம் வியர்த்துப்போனவளாய் குந்தவையை ஏறிட்டாள்.

" நோ.....நோ..... வீடியோவை ஆஃப் பண்ணுங்க.... அதையெல்லாம் நான் பார்க்க
விரும்பலை"

" இட்ஸ் ஒ.கே. மேடம் " என்று சொன்ன குந்தவை லேப்டாப்பை அணைத்தாள்.

" எனக்கும் ஆரம்பத்துல பார்க்க கஷ்டமாயிருந்தது. அதுக்கப்புறம் அது ஒரு பழகிப் போன விஷயமாய் மாறிடுச்சு......."

அதுவரைக்கும் எதுவும் பேசாமல் மெளனமாயிருந்த இதிகாசன், தொண்டையைக் கனைத்தபடி வாஹினியிடம் திரும்பினார்.

" மேடம்...... இப்ப உங்களுக்கு "ஜெல்பால் ப்ளாஸ்டர்"ன்னா என்னான்னு புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன் "

Flat number 144 adhira apartment episode 42

" லேசாப் புரியுது.... அதிரா அப்பார்ட்மெண்ட்டில் நடந்த அந்த ஆறு மரணங்களுக்கும் காரணம்"ஜெல்பால் ப்ளாஸ்டர்" என்கிற ரசாயனப் பொருள்தான்னு சொல்ல வர்றீங்களா ...... இதிகாசன்.......? "

" அதேதான் மேடம்.... ஒரு அப்பார்ட்மெண்ட்ல ஆறு பேர் ..... அதிலும் குறிப்பிட்ட 144ம் நெம்பர் ஃப்ளாட்ல மட்டும் அஞ்சு பேர், திடீர்ன்னு ஹார்ட் அட்டாக் வந்து, இறந்து போயிருக்காங்க. அப்படி அவஙக இறந்த உடனேயே, அந்த ஃபேமிலி சம்பந்தப்பட்ட டாக்டர்கள் அது இயற்கையான மரணம்ன்னு சொல்லி, யார்க்கும் சந்தேகம் வராதபடி முற்றுப்புள்ளி வெச்சிருக்காங்க. அந்த ஆறு பேர்ல ஒருத்தரோட பாடியையாவது போஸ்ட்மார்ட்டம் பண்ணிப் பார்த்திருந்தா உண்மை வெளியே எட்டிப்பார்த்திருக்கும். போஸ்ட்மார்ட்டம் நடந்துடக்கூடாதுன்னு யாரோ முயற்சி பண்ணியிருக்கிறது நல்லாவே தெரியுது. போலீஸூக்கு கூட இதுல சந்தேகம் வராதது எனக்கு ஆச்சர்யமாயிருக்கு மேடம்...... "

" ஆறு பேரோட மரணத்துக்குப் பின்னாடி போலீஸ் இருக்கலாம்ன்னு சொல்ல வர்றீங்களா .......? "

" அதுல என்ன சந்தேகம் மேடம்......? போலீஸ் இந்த விவகாரத்துல நிச்சயமாய் சம்பந்தப்பட்டு இருக்காங்க "

" அதுக்கு ஆதாரம் ஏதாவது இருக்கா.......? "

இதிகாசன் ஒரு பெருமூச்சோடு நிமிர்ந்தார்.

" ஸாரி மேடம்...... அப்படியொரு ஆதாரம் எங்ககிட்ட இருந்திருந்தா, அதை எப்பவோ உங்ககிட்ட கொண்டு வந்து கொடுத்திருப்போம். இனிமேல்தான் அந்த ஆதாரத்தைத் தேடி கண்டுபிடிக்கப்போறோம் "

" எப்படி.......? "

" அதுக்கு ஒரு வழியிருக்கு... அதைப்பத்திதான் நாம இப்ப பேசப்போறோம் "

" என்ன வழி.......? " வாஹினி இதிகாசனிடம் கேட்டுக்கொண்டிருக்கும்போதே வீட்டுக்குள் காலிங்பெல் ஒலித்தது.

" யாராக இருக்கும் .......? "

நெற்றியில் உதித்த கேள்விக்குறியோடு குந்தவை எழுந்தாள்.

சிறிதும் பதட்டம் இல்லாத குரலில் " நான் யார்ன்னு பார்த்துட்டு வந்துடறேன் " என்று சொன்னவள் வாசல் கதவை நோக்கி வேகமாய் போனாள். தாழ்ப்பாளை விலக்குவதற்கு முன்னால் பக்கவாட்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தாள்.

சந்திரசூடன் நின்றிருப்பது தெரிந்தது.

******
குந்தவை அதிர்ந்து போனவளாய் மெல்ல பின்வாங்கி மறுபடியும் வீட்டுக்குள் வந்தாள். வாஹினியும், இதிகாசனும் அவளை வியப்பாய்ப் பார்த்தபடி கேட்டார்கள்.

" யார் வந்திருக்காங்க .......? "

குந்தவை குரலில் லேசாய் குளிர் அடித்தது.

" ஏ.ஸி.பி. சந்திரசூடன்......... "

திகைப்போடு தன்னிச்சையாய் வாஹினி மெல்ல எழுந்து நின்றாள். உடம்பில் லேசாய் ஒரு பதட்டம் பரவியிருந்தது.

" அவர்.... எப்படி ...... இங்கே.......? "

"தெரியலை மேடம்..... ஜன்னல் வழியாய் பார்த்தேன். அவர்தான் நின்னுட்டிருக்கார். அவர் எதுக்காக இங்கே வரணும் .......? "

" யூனிஃபார்ம்ல இருக்காரா.... இல்லை மஃப்டியா.......? "

" மஃப்டிதான்.... ஒயிட் ஃபேண்ட் ஒயிட் ஷர்ட் " குந்தவை சொல்லிக் கொண்டிருக்கும்போதே இரண்டாவது தடவையாய் காலிங்பெல் நீளமாய் ஒலித்தது. அந்த அழைப்பில் அவசரமும் கோபமும் தெரிந்தது.
வாஹினி சொன்னாள்.

" மொதல்ல போய் டோரை ஓப்பன் பண்ணுங்க. நாம மூணு பேரும் என்ன தப்பு பண்ணினோம்... அவரைப் பார்த்து பயப்படறதுக்கு .......? "

" இது பயமில்லை மேடம்.... ஒரு டென்ஷன். அவ்வளவுதான்" சொன்ன குந்தவை வேகவேகமாய் வாசல் கதவை நெருங்கி தாழ்ப்பாளை விலக்கினாள்.

வெளியே காத்திருந்த சந்திரசூடன் அவளை அந்நியமாய்ப் பார்த்துக்கொண்டே கேட்டார்.

" உள்ளே ஸ்மேஷ் பத்திரிக்கையின் எடிட்டர் வாஹினி இருக்காங்களா .......? "

" ஆ....ஆ....ஆமா .... இருக்காங்க "
"அயாம் சந்திரசூடன்...... அஸிஸ்டெண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ்.... "

" உங்களை எனக்குத் தெரியும் ஸார்.... ஐ நோ யூ ப்ளீஸ் கம் இன் "

சந்திரசூடன் உள்ளே வர வரவே, வாஹினி அவரைப் புன்னகையோடு எதிர்கொண்டாள்.

" ரியலி சர்ப்ரைஸ் ஸார்.... ஐ டிட் நாட் எக்ஸ்பெக்ட் டூ மீட் யூ அட் திஸ் ப்ளேஸ்... நான் இந்த இடத்துல இருக்கிறது உங்களுக்கு எப்படி தெரியும் .......? "

" எனக்கு டெலிபோனில் தகவல் வந்தது "

" என்ன தகவல் .......? "

" ஸ்மேஷ் பத்திரிக்கையின் ஆசிரியர் வாஹினி இந்த நல்வாழ்வு நகர் ராஜேந்திரபிரசாத் ரோட்டில் இருக்கிற குந்தவை என்கிற ஒரு பெண்ணோட வீட்டுக்கு வந்த பேசிட்டிக்கிறதாகவும் கூட ஒரு ஆண் நபர் இருக்கிறதாகவும் அந்த தகவல் சொன்னது "

டென்ஷனிலிருந்து விடுபட்ட, வாஹினி சிரித்தாள்.

" உடனே சந்தேகப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்துட்டீங்க.......? "

" அதை சந்தேகம்ன்னு சொல்ல முடியாது. ஒரு ஆர்வம்ன்னு வெச்சுக்கலாம் "

" இட்ஸ் ஒ.கே...... ஸார் நான் இங்கே இருக்கேங்கிற தகவலை உங்களுக்கு சொன்னது யாரு அந்த விபரத்தையாவது நான் தெரிஞ்சுக்கலாமா .......? "

சந்திரசூடன் தயங்க வாஹினி குரலை இழுத்தாள்.

" உங்களுக்கு விருப்பம் இருந்தா சொல்லலாம். இல்லேன்னா வேண்டாம் "

" நோ மேடம்...... இதுல எந்தவிதமான ரகசியமும் இல்லை..... நீங்க இந்த வீட்ல இருக்கிறதாக தகவல் கொடுத்தது வேறு யாருமில்லை பூரணி லேடிஸ் நெஸ்ட் ஹாஸ்டலின் நிர்வாகியாய் இருக்கக்கூடிய அன்னபூர்ணிதான். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் அவங்க எனக்கு போன் பண்ணி நான் இப்போ மதுராந்தகத்துக்கு பக்கத்தில் இருக்கிற நல்வாழ்வு நகர் என்கிற குடியிருப்புப் பகுதிக்கு ரிலேடீவ் ஒருத்தரைப் பார்க்க வந்தேன். இந்த நகர்ல இருக்கிற ஒரு வீட்டுக்கு ஸ்மேஷ் பத்திரிக்கையின் எடிட்டர் வாஹினியும், ஒரு ஆணும் வந்து இருக்காங்க.... அந்த ஆண் யார்ன்னு எனக்குத் தெரியலை. என்னோட ஹாஸ்டலில் தங்கியிருந்த லட்சணா என்கிற பெண் கொலை செய்யப்பட்டது சம்பந்தமாய் நீங்களும், வாஹினியும் என்கிட்ட வந்து ஒரு விசாரணையை நடத்திட்டு போனதால, இந்த விஷயத்தை உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கனும்ன்னு தோணிச்சு.... ஏன்னா லட்சணாவோட கொலை விஷயத்துல நாம எந்த ஒரு நிகழ்வையும் அலட்சியமாகவும், சாதாரணமாகவும் எடுத்துக்க முடியாதுங்கிற எண்ணம்தான் இதுக்குக் காரணம்ன்னு அன்னபூர்ணி சொன்னாங்க "

வாஹினி லேசாய் ஒரு புன்முறுவலை தன்னுடைய உதட்டுக்குக் கொடுத்தபடி சொன்னாள்.
" லட்சணாவோட மர்டர் சம்பந்தமாய் அன்னபூர்ணிக்கு என் மேல சந்தேகம் இருக்குன்னு நினைக்கிறேன் "
" அதை சந்தேகம்ன்னு எடுத்துக்க முடியாது மேடம் "

" வேற எப்படி எடுத்துக்கலாம்ன்னு சொல்லுங்க "

" அவங்களுக்கு ஏற்பட்ட ஒரு குழப்பம்ன்னு வெச்சிக்கலாம். அந்த குழப்பத்தை தெளிவுபடுத்திக்கத்தான் நான் நேரிடையாய் புறப்பட்டு இங்கே வந்தேன். அன்னபூர்ணி கொடுத்த இன்னொரு கூடுதலான விஷயமும் காரணம். அவங்க ரிலேடீவ்ஸ் மூலமாய் தெரிஞ்சுகிட்ட தகவலின்படி இந்த வீட்டில் குடியிருக்கிற குந்தவை ஏதோ ஒரு புராஜெக்ட்டை ரிசர்ச் பண்ணி டாக்டரோட் பட்டம் வாங்கியிருக்கிறதாகவும் சொன்னாங்க. அது என்னான்னு தெரிஞ்சுக்கவும் நான் உடனே புறப்பட்டு வந்தேன்....... "

சந்திரசூடன் பேசப்பேசவே குந்தவை இடைமறித்தாள்.

" ஸார்.... மேடம் வாஹினி மேல நீங்க சந்தேகப்பட எந்த ஒரு முகாந்திரமும் இல்லை..... உண்மையைச் சொல்லப்போனா நான்தான் ஃபோர்ஸ் பண்ணி அவங்களை இங்கே வரவழைச்சேன் "

" அதுக்கான காரணத்தை நான் தெரிஞ்சுக்கலாமா .......? "

" தாராளமாய்...... என்னைக் கேட்டா நீங்க சரியான நேரத்துக்குத்தான் என்னோட வீட்டுக்கு வந்து இருக்கீங்க. யூ ஹேவ் கம் ஹியர் ஜஸ்ட் இன் டைம் வாங்க .... உள்ளே போய் உட்கார்ந்து பேசுவோம்.........."

வீட்டின் உட்புறத்தை நோக்கி கை காட்டினாள் குந்தவை.

**********
கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள்.

குந்தவையும், இதிகாசனும் மாறி மாறி எல்லா விஷயங்களையும் சந்திரசூடனிடம் சொல்லி முடித்தார்கள். எல்லாவற்றையும் உன்னிப்பாய் கேட்டுக் கொண்ட அவர் யோசனையில் சில விநாடிகளைக் கரைத்துவிட்டு கேட்டார்.

" ஜெல்பால் ப்ளாஸ்டர் என்கிற ரசாயனப்பொருளை உணவோடு சேர்த்து கொடுக்கப்பட்டுதான் அந்த அதிரா அப்பார்ட்மெண்ட்டைச் சேர்ந்த சொர்ண ரேகா, தர்ஷிணி, நம்பின்னை, வான்மதி, அன்வர் அலி, தனசேகர் ஆறு பேரும் கொலை செய்யப்பட்டிருக்கணும்ன்னு சொல்ல வர்றீங்களா .......? "

" எஸ்... ஸார் " என்றாள் குந்தவை.

" அதை எப்படி கண்டுபிடிக்கப்போறோம் .......? "

" தேர் ஈஸ் ஏ வே ஸார்.. மரணமடைந்த ஆறு பேர்களில் நான்கு பேரோட உடல்கள் எரிக்கப்பட்டும், ரெண்டு பேரோட உடல்கள் புதைக்கப்பட்டும் இருக்கு. அப்படி புதைக்கப்பட்ட ரெண்டு பாடிகளையும் மறுபடியும் தோண்டியெடுத்து, போஸ்ட்மார்ட்டத்துக்கு உட்படுத்தி எலும்புகளில் ஒட்டியிருக்கும் சதைத் துணுக்குகளை ஃபாரன்ஸிக் கெமிஸ்டரி சென்டருக்கு அனுப்பி வைக்கணும் ஸார். அந்த ரிசல்ட் ரிப்போர்ட்டில் கண்டிப்பாய் ஜெல்பால் ப்ளாஸ்டர் பற்றிய தகவல்கள் இருக்கும்..... தேர் ஈஸ் நோ டவுட் அபெளட் இட் "

" ஆறு பேர்களில் இரண்டு பேர் புதைக்கப்பட்டிருப்பதாய் சொன்னீங்க. யார் அந்த ரெண்டு பேர் .......? "

" வான்மதியும், அன்வர் அலியும் ஸார் "
**********
( தொடரும்)

[ அத்தியாயம் : 1 , 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41 ]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+