ராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 10
- ராஜேஷ்குமார்
நித்திலனும் சாதுர்யாவும் முகங்கள் மாறிப் போனவர்களாய் ட்ரேயில் காப்பி டம்ளர்களோடு
நின்றிருந்த வெள்ளுடுப்பு யூனிஃபார்ம் அணிந்த நடுத்தர வயது பேரரையேப் பார்க்க அவர் சுற்றும்
முற்றும் பார்த்துவிட்டு ஒரு சிறிய புன்னகையோடு பேச்சைத் தொடர்ந்தார்.
"என்ன... ரெண்டு பேரும் பொறியில் மாட்டிகிட்ட எலிகள் மாதிரி பார்க்கறீங்க.... இது
முகில்வண்ணன் அய்யாவோட இரும்புக்கோட்டை. இந்த கோட்டைக்குள்ளே அநாவசியமாய் ஒரு
துரும்பு நுழைஞ்சா கூட கண்டுபிடிச்சுடுவோம்... நீங்க ரெண்டு பேரும்
ஐ.டி.டிபார்ட்மெண்ட்தானே...?"
"அது ... வந்து...."
"வீணாய் பொய் பேசி நேரத்தை வேஸ்ட் பண்றது எனக்குப் பிடிக்காது... உண்மையை
சொல்லிட்டா இந்த இடத்தில் இருந்து நீங்க ரெண்டு பேரும், உயிரோடு போகலாம். இல்லேன்னா
பண்ணை வீட்டுக்குப் பின்னாடி இருக்கிற சவுக்குத் தோப்புதான் உங்களுக்கு சமாதி"
"நித்தி! சொல்லிடு," என்றாள் சாதுர்யா.
நித்திலன் குரலைத் தாழ்த்தினான். "இதோ பார்! நாங்க ஐ.டி. டிபார்ட்மென்ட்தான். இந்த
ஃபங்க்ஷனுக்கு யார் யார் வர்றாங்கன்னு பார்த்து லிஸ்ட் எடுக்க வந்தோம். மற்றபடி நாங்க எந்த
ஒரு பிரச்சனையும் பண்ண வரல."
அந்த பேரர் சிரித்தார்.
"நீங்க இங்கே வந்ததே பிரச்சனைதானே.... அய்யாவோட மகனுக்கோ, மாப்பிள்ளைக்கோ இந்த
விஷயத்தை தெரியப்படுத்தினா உங்க நிலைமை என்னாகும் தெரியுமா...?"
"தெரியுது.... இப்ப உனக்கு என்ன வேணும்...? பணமா...?"
"வேறென்ன வேணும்... பணம்தான். ஆனா எனக்கு அந்த பணம் வேண்டாம்."
"பின்னே யார்க்கு...?"
"அதோ! அந்த டைனிங் ஹாலுக்குப் பின்னாடி பச்சைக் கலர் பெயிண்ட் அடிச்ச கதவு ஒண்ணை
உங்களால பார்க்க முடியுதா?"
"முடியுது..."
"அந்த அறைக்குள்ளே உங்களுக்காக ஒருத்தர் வெயிட் பண்ணிட்டிருக்கார். போய்ப் பார்த்து டீலிங்
பேசிட்டு வாங்க.... இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துக்குள்ளே முகில் அய்யாவும், சி.எம்.மும் இந்த
இடத்துக்கு வந்துடுவாங்க... அதுக்குள்ளே அங்கே போய் டீலிங் பேசிட்டு வந்துடுங்க..."
"அந்த ரூம்ல இருக்கிறது யாரு?"
"போய்ப் பாருங்க தெரியும்," பேரர் சொல்லிவிட்டு மெதுவாய் நகர்ந்து போய்விட நித்திலனும்,
சாதுர்யாவும் தயக்க நடை போட்டபடி அந்தப் பச்சைப் பெயிண்ட் அடித்த கதவை நோக்கிப்
போனார்கள். சாதுர்யா அவன் தோளைப் பற்றினாள். "நித்தி... நாம ஏதோ ஒரு பிரச்சனையில்
மாட்டிக்கப் போறோம்ன்னு தெரியுது..."
"பயப்படாதே... அந்த பேரர்க்கும் சரி இப்ப நாம் பார்க்கப் போயிட்டிருக்கிற நபர்க்கும் சரி,
உன்னையும் என்னையும் முகில்வண்ணனுக்கு காட்டிக் கொடுக்கும் எண்ணம் இல்லை. அவங்க
நோக்கம் பணம்."
"நித்தி! இப்போ நம்ம கிட்டே நம்ம செலவுக்குத் தேவையான பணம் மட்டும்தானே இருக்கு. அந்த
ஆள் ஒரு பெரிய தொகையை டிமாண்ட் பண்ணினா என்ன பண்றது....?"
"அதெல்லாம் அந்த நபர்க்குத் தெரியாமலா இருக்கு....? வா மொதல்ல ஆள் யார்ன்னு பார்ப்போம்"
"நம்மை எப்படி அடையாளம் தெரிஞ்சுகிட்டாங்க?"
சாதுர்யா வியர்த்த முகத்தோடு கேட்டுக் கொண்டு இருக்கும்போதே நித்திலன் பச்சை நிற
பெயிண்ட் அடித்த கதவுக்கு முன்பாய் போய் நின்று மெல்லத் தள்ளினான். அது சத்தமில்லாமல்
உள்வாங்கியது.
நித்திலன் எட்டிப் பார்த்தான்.
சுத்தமான அந்த சிறிய அறையின் மூலையில் ஒரு மேஜை நாற்காலி போடப்பட்டிருக்க,
நாற்காலியில் கஜபதி இறுக்கமான முகத்தோடு உட்கார்ந்திருந்தார்.
நித்திலனும் சாதுர்யாவும் அதிர்ந்து போனவர்களாய் கஜபதியைப் பார்த்துக் கொண்டு நிற்க, அவர்
தனக்கு முன்னால் போடப்பட்டிருந்த நாற்காலிகளைக் காட்டினார்.
"ரெண்டு பேரும் உட்கார்ங்க...."
இருவரும் தயக்கமாய் உட்கார்ந்தார்கள்.
"நான் இங்கே இருப்பேன்னு நீங்க எதிர்பார்த்து இருக்கமாட்டீங்க இல்லையா...?"
நித்திலன், "ஆ... ஆமா...!" என்றான் ஆச்சர்யமாய் தாளாமல்.
"தம்பி.... நீ முத்துப்பாண்டியனோட மகன் இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும்.
அப்படியிருந்தும் உன்னை அவரோடு பையன்தான்னு முகில்வண்ணன்கிட்டே ஏன் பொய்
சொன்னேன்னு உனக்குத் தெரியுமா?"
"தெ.... தெரியாது....!" நித்திலனின் தலையாடியது. "உன்னால இந்த இடத்துல எனக்கு ஒரு
வேலை ஆகணும்...!"
"எ...எ....என்ன வேலை....?" நித்திலன் குழப்பமான முகத்தோடு கேட்டுக் கொண்டிருக்கும்போதே
வெள்ளுடுப்பு அணிந்த பேரர் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தார். தாழ்ப்பாழை
போட்டபடி கேட்டார்.
"என்ன கஜபதி ... விஷயத்தை சொல்லிட்டியா?"
"இல்ல... பத்ரி... இப்பத்தான் பேச்சை ஆரம்பிச்சேன். என்ன சி.எம். உள்ளே வந்தாச்சா...?"
"வரலை.... எப்படியும் வரவேற்பெல்லாம் முடிஞ்சு ஃபங்க்ஷன் நடக்கிற இடத்துக்கு வர எப்படியும்
பத்து நிமிஷமாயிடும். அதுக்குள்ளே இந்த ரெண்டு பேர் கிட்டேயும் சொல்ல வேண்டிய
விஷயத்தைச் சொல்லிவிடுவோம்."
"நான் சொல்லிக்கிறேன் பத்ரி... நீ வெளியே போய் அங்கே நடக்கிற சம்பவங்களை கவனி.
ஏதாவது பிரச்சனைன்னா எனக்கு போன் பண்ணு.... பேரர் வேஷம் போட்டிருக்கே...அதை
மெய்ன்டைன் பண்ணு".
"ம்...ம்... நமக்கு வேலை நடந்தால் சரி."
பத்ரி சொல்லிவிட்டு வெளியேறிப் போக கஜபதி நித்திலனை ஏறிட்டார். மெதுவான குரலில் பேச
ஆரம்பித்தார். "தம்பி.... நீயும் இந்தப் பொண்ணு சாதுர்யாவும் ஐ.டி. டிபார்ட்மெண்டில் இருக்கிற
விஷயம் எனக்குத் தெரியும்.... கடந்த ஒரு மாச காலமாய் சென்னை ஐ.டி. டிபார்ட்மெண்டில் யார்
யார் எந்தெந்த பதவிகளில் இருப்பாங்க... அவங்களோட அதிகாரங்கள் என்ன என்கிறதைப்
பற்றியும் சர்வே எடுத்து லிஸ்ட் பண்ணியிருக்கேன். உங்க ரெண்டு பேரையும் இந்த இடத்துல
பார்த்ததும் எனக்கு ஆச்சர்யம். கண்டிப்பாய் இந்த இடத்தை உளவு பார்க்கத்தான் வந்து இருப்பீங்க
என்கிற உண்மையும் புரிஞ்சுகிட்டேன். என்ன நான் சொன்னது சரியா?"
"சரி..."
"எப்படி உள்ளே வந்தீங்க...?"
நித்திலன் விபரம் சொன்னான். கஜபதி அவன் சொன்னதை கவனமாய் செவிமடுத்துவிட்டு
பெரூமூச்சு விட்டார்.
"நீங்க ரெண்டு பேருமே ரிஸ்க் எடுத்து உள்ளே வந்து இருக்கீங்க... நீங்க ரெண்டு பேரும் யார்
யார்ங்கிற உண்மை எந்த நிமிஷம் தெரிஞ்சாலும் சரி, அடுத்த நிமிஷமே உயிரோடு இருக்க
மாட்டீங்க. ஏன்னா முகில்வண்ணனும் சரி, அவர் கூட இருக்கிற ஆட்களும் சரி ஈவு இரக்கம்
இல்லாத, இருதயத்தை கழற்றி வெச்சுட்ட ஆட்கள். அவங்களுக்கு போலீஸ் டிபார்ட்மெண்ட்
ஆட்கள், ஐ.டி. டிபார்ட்மெண்ட் ஆட்கள்ன்னாலே அலர்ஜி. அவங்களால பிரச்னை வர்றமாதிரி
இருந்தா போட்டுத் தள்ளிட்டு சட்டத்தையும், கோர்ட்டோட தீர்ப்பையும் விலை கொடுத்து
வாங்கிருவாங்க...."
சாதுர்யா குறுக்கிட்டாள்.
"அது எங்களுக்கும் தெரியும்.... இப்ப நீங்க எதுக்காக முகில்வண்ணன்கிட்டயிருந்து எங்களைக்
காப்பாற்றி இந்த அறைக்கு வரவழைச்சு பேசிட்டு இருக்கீங்க...? எங்களால ஏதோ ஒரு
வேலையாகணும்ன்னு சொன்னீங்க அது என்ன வேலை?"
"சொல்றேன்... அதுக்கு முன்னாடி நான் கேட்கிற இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க... நீங்க
ரெண்டு பேரும் இங்கே வந்தது முகில்வண்ணனோட பினாமி ஆட்கள் யார் யார்ன்னு
கண்டுபிடிக்கத்தானே?"
"ஆமா..."
"அந்த லிஸ்ட்டை நான் தர்றேன். அப்புறம் இன்னொரு விஷயத்திலும் உங்க ஐ.டி.
டிபார்ட்மெண்டுக்கு உதவிபண்ணலாம்ன்னு இருக்கேன்".
"என்ன உதவி....?"
"முகில்வண்ணன்தான் முதல் அமைச்சராய் இருந்தபோது ஊழல் பண்ணி முறைகேடாய்
சம்பாதிச்ச பணம் மொத்தம் 5000 கோடியைத் தாண்டும். அந்தப் பணத்தை எல்லாம் அவர் எங்கே
எப்படி புத்திசாலித்தனமாய் பதுக்கி வெச்சிருக்கார்ன்னு எனக்குத் தெரியும், உங்க டிபார்ட்மெண்ட்
நூற்றுக்கணக்கான அதிகாரிகளோடு தடாலடியாய் நான் சொல்ற இடத்துல 'ரெய்டு' பண்ணினா
போதும். பணத்தை நீங்க பிஸ்கெட்களாகவும் வெள்ளிக் கட்டிகளாகவும் அள்ளிடலாம்."
நித்திலனும் சாதுர்யாவும் நிமிர்ந்தார்கள்.
"நீங்க சொல்றது உண்மையா?"
"போன மாசம் வரைக்கும் நானும் ஒரு பித்தலாட்ட அரசியல்வாதிதான். முகில்வண்ணனுக்கு
இவ்வளவு பணம் சேர நானும் ஒரு காரணம். எத்தனையோ பேர்களை மிரட்டி சொத்துக்களை
பறிமுதல் பண்ணியிருக்கேன். அப்படி சொத்துக்களை பறி கொடுத்தவர்களில் பாதிபேர்
தற்கொலை பண்ணிட்டு செத்துப் போயிருக்காங்க. அந்த செய்தியை எல்லாம் பேப்பர்ல படிக்கும்
போது எம்மனசுக்கு கஷ்டமாய் இருக்கும். பண்ணின பாவத்துக்கெல்லாம் பரிகாரம் தேடத்தான்
இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கேன்."
நித்திலன் முகம் மலர்ந்தான்.
"நல்ல முடிவு....!"
கஜபதி மேற்கொண்டு பேசும் முன்பு பேரர் கதவைத் திறந்து கொண்டு பதட்டத்தோடு உள்ளே
வந்தார். குரல் கம்மியது.
"கஜபதி....!"
"என்ன பத்ரி...?"
"'முகில்வண்ணனோட மாப்பிள்ளை மணிமார்பன் உன்னைத் தேடிகிட்டு இருக்கான்... எதுக்குன்னு
தெரியலை"
.....
[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]