என்ன சொல்றீங்க, கஜபதி உயிரோடு இல்லையா?.. பைவ் ஸ்டார் துரோகம் (34)
- ராஜேஷ்குமார்
வேல்முருகன் அதிர்ச்சியில் உறைந்து போனவராய் சில விநாடிகள் ஒன்றும் பேசத் தேன்றாமல் செல்போனை காதில் பொருத்திக்கொண்டு அப்படியே நின்றார். பிறகு நடுக்கமான குரலில் கேட்டார்.
"என்ன சொல்றீங்க நித்திலன் கஜபதி உயிரோடு இல்லையா...? "
"ஆமா.... "
"என்னாச்சு...? "
"தெரியல ஸார்...... என்னுடைய வருமானத்துறை மேலதிகாரியான அருள் பத்து நிமிஷத்துக்கு முன்னாடி எனக்கு போன் பண்ணி பேசினார். அவர்தான் கஜபதி உயிரோடு இல்லை என்கிற விஷயத்தைச் சொன்னார்"
"கஜபதி எப்படி இறந்தார்ன்னு சொல்லலையா...? "
"சொல்லலை... "
"கஜபதியோட மரணம் எப்படின்னு கேட்க வேண்டியதுதானே...? "
"கேட்டேன் ஸார்......அதுக்கு அவர் போன்ல ஏதுவும் வேண்டாம். நீ....உடனே புறப்பட்டு நுங்கம்பாக்கத்தில் இருக்கிற கஜபதி வீட்டுக்கு வந்துருன்னு சொன்னார். அப்படியே உங்களுக்கும் தகவல் கொடுத்துடச் சொன்னார். கஜபதி வீடு உங்களுக்கு தெரியுமா ஸார். ..? "
"தெரியும்.....! "
"உங்களால் வர முடியுமா...? "
"வர்றேன் ....... "
"போலீஸ் கமிஷனரின் இன்ஸ்ட்ரக்சன்படி திரிசூலம் போனீங்க, அங்கே நிலவரம் என்ன ஸார்..? "
"இங்கேயும் நிலவரம் சரியில்லை..... மணிமார்பன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நாம எதிர்பார்க்காத சம்பவங்கள் வேகவேகமாய் நடந்துகிட்டு இருக்கு....... "
"என்ன ஸார் சொல்றீங்க........? "
"காணாமல் போனதாய் சொல்லப்பட்ட முகில்வண்ணனோட மகன் செந்தமிழ் திரிசூலம் ஏரியாவில் இருக்கிற ஒரு ஹாஸ்பிடலில் உணர்வற்ற நிலையில் அட்மிட் செய்யப்பட்டிருக்கார்.... அட்மிட் பண்ணினது யார்ன்னு தெரியல...... ஒரு மனிதனின் நரம்பு மண்டலத்தை முடமாக்கவல்ல இண்ட்ரா மஸ்குலர் இஞ்செகஷன் அவர்க்குப் போடப்பட்டிருக்கு.... மணிமார்பனின் கொலைக்கு காரணமான நபரை வேகமாய் நெருங்கியாகணும் நித்திலன். அப்படி இல்லாத பட்சத்தில் இன்னமும் பல இழப்புகளை நாம் பார்க்க வேண்டியிருக்கும் "
"ஸார்..... செந்தமிழோட உயிர்க்கு ஆபத்து இல்லேயே.........? "
"உயிர்க்கு எந்த ஆபத்தும் இல்லை....... ஆனா உடம்போட செயல்பாடுகள் இனிவரும் நாட்களில் எப்படியிருக்கும்ன்னு சொல்ல முடியாது. நான் நேர்ல வந்து உங்களுக்கு எல்லாத்தையும் சொல்றேன்"
வேல்முருகன் செல்போனில் பேச்சை முடித்துக்கொண்டு ஒரு நர்ஸிடம் பேசிக்கொண்டிருந்த ட்யூட்டி டாக்டரிடம் வந்தார்.
"டாக்டர்.....! "
அவர் நர்ஸை விட்டு விலகி வந்தார்.
"எஸ்..... "
"நான் ஒரு அவசர வேலையா கிளம்பிப் போக வேண்டியிருக்கு...... செந்தமிழுக்கு சரியான ட்ரீட்மெண்ட்டை கண்டின்யூ பண்ணுங்க.. நான் நாளைக்குக் காலையில் வர்றேன்.... இஃப் எனி அர்ஜென்ஸி காண்டாக்ட் மீ...... ப்ளீஸ் நோட்....திஸ் ஈஸ் மை செல் நெம்பர்...... "
வேல்முருகன் தன்னுடைய செல்போனின் எண்களை சொல்ல டாக்டர் ஒரு தாளில் அதை குறித்து வைத்துக்கொண்டார்.
"டாக்டர் ....! வெரி மோஸ்ட் இம்பார்டெண்ட் ஒன் ஈஸ்..... செந்தமிழைப் பார்க்க யாரையும் அலவ் பண்ண வேண்டாம். செந்தமிழ் நார்மலான நிலைக்கு வருகிற வரைக்கும் அவர் இங்கே அட்மிட்டாகியிருக்கிற விஷயம் மீடியாக்களுக்கு தெரியக்கூடாது..... ! "
"டோண்ட் வொர்ரி ஸார்......இந்தப் பிரச்சினையின் சீரியஸ்னஸ் எனக்கும் தெரியுது. நான் சீஃப் டாக்டர்கிட்டே பேசிட்டு தேவையான ஏற்பாடுகளைப் பண்ணிடறேன்"
"தேங்க்யூ டாக்டர்...... "வேல்முருகன் டாக்டரின் கையைப் பற்றிக் குலுக்கிவிட்டு அந்த அறையினின்றும் வெளிப்பட்டார்.
---
நேரம் நள்ளிரவைத் தாண்டியிருக்க, வேல்முருகன் நுங்கம்பாக்கம் ஏரியாவில் இருந்த கஜபதி வீட்டுக்கு முன்பாய் ஆட்டோவை நிறுத்தி இறங்கிக் கொண்டார்.
கஜபதி வீடு மங்கலான வெளிச்சத்தில் அமைதியாய் இருந்தது. இறங்கி சிறிய காம்பெளண்ட் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே போனார். வீட்டு வாசற்படி ஏறும்போதே நித்திலன் எதிர்பட்டான்.
"வாங்க ஸார்........ உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கோம்... "
"இந்த ஏரியா பீட் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து இன்ஸ்பெக்டர் வந்துட்டாரா...? "
"வந்துட்டார் .......ஸார்"
"அவர் பேர் என்ன ...? "
"பிரசன்னா ........ அவரோடு சப்- இன்ஸ்பெக்டர் ஒருத்தரும், ரெண்டு கான்ஸ்டபிள்களும் வந்து ஃபார்மாலீடீஸைப் பார்த்துட்டு இருக்காங்க...! "
"உங்க ஐ.டி. டிபார்ட்மெண்ட் மேலதிகாரி அருள் வந்துட்டாரா...? "
"வந்துட்டார் ஸார்....... இன்ஸ்பெக்டர் பிரசன்னாவோடு பேசிட்டிருக்கார்" நித்திலன் சொல்லிக்கொண்டே பக்கத்தில் இருந்த ஒரு அறைக்குள் நுழைந்தார். அந்த அறையின் ஜன்னலுக்குப் பக்கத்தில் நின்றபடி ஐ.டி. அதிகாரி அருளும், இன்ஸ்பெக்டர் பிரசன்னாவும் ஏதோ பேசிக்கொண்டு இருக்க, வேல்முருகனைப் பார்த்ததும் பிரசன்னா சட்டென்று அலர்ட்டாகி அட்டென்ஷனுக்கு வந்து சல்யூட் வைத்துத் தளர்ந்தார். அதை தலையசைப்பால் ஏற்றுக்கொண்ட வேல்முருகன் இன்ஸ்பெக்டர்க்கு நேர் எதிராய் வந்து நின்றார்.
"மிஸ்டர் பிரசன்னா........... "
"ஸார்....... "
"கஜபதியோட மர்டர் நான் எதிர்பார்க்காத ஒன்று. எப்படி மர்டர்...? "
"ஸாரி ஸார்........ கஜபதியை யாரும் கொலை செய்யலை...! "
"தென் ...? "
"சூசையிட் "
"என்னது தற்கொலையா...? "
"எஸ் ஸார்....... தூக்கு போட்டு. தற்கொலை லெட்டர் எழுதி வெச்சுட்டுத்தான் அந்த முடிவை எடுத்திருக்கார்....... "
வேல்முருகன் அதிர்ந்து போனவராய் தலையை ஆட்டினார். "இட் காண்ட் பி..... கஜபதி தற்கொலை பண்ணியிருக்க முடியாது மிஸ்டர் பிரசன்னா...... பாடி எங்கே...? "
" கம் வித் மீ ஸார்....... "இன்ஸ்பெக்டர் பிரசன்னா வேல்முருகனை அடுத்தாற்போல் இருந்த அந்த அறைக்குக் கூட்டிக்கொண்டு போக அந்தக்காட்சி அவருடைய பார்வையைத் தாக்கியது.
அறையின் மைய சீலிங்கிலிருந்து ஒரு நேர்க்கோட்டைப் போல் தொங்கிக் கொண்டிருந்தார் கஜபதி. அதிர்ச்சியில் உறைந்து போய் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த வேல்முருகனிடம் பிரசன்னா சொன்னார்.
" ஸார் .....இது கஜபதி தற்கொலை பண்ணிக்கப் போறதுக்கு முந்தி அவர் எழுதின லெட்டர்...! "
அதிர்ச்சி விலகாத முகத்தோடு பிரசன்னா நீட்டிய கடிதத்தை வாங்கிப் படிக்க ஆரம்பித்தார் வேல்முருகன்.
காவல்துறைக்கு கஜபதி எழுதிக் கொண்டது. இது கடிதம் அல்ல. என்னுடைய மரண வாக்குமூலம். என் மரணத்துக்கு நானே காரணம், யாரும் காரணமில்லை என்பதை என்னுடைய வாக்குமூலத்தின் ஆரம்ப வரியிலேயே அழுத்தமாய்ச் சொல்லிவிடுகிறேன். நான் என் வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய தவறு ஒரு முழுநேர அரசியல்வாதியாக மாறியதுதான். கட்டின மனைவியை மறந்து, பெற்ற மகளை மறந்து நான் சார்ந்த கட்சிக்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றினேன். என் மனைவி நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோதும்கூட அவளைப்போய் பார்க்காத அளவுக்கு ஓர் அழுக்கான அரசியல்வாதி நான். என் மனைவி இறந்த செய்தி கூட எனக்கு நான்கு மணிநேரம் கழித்துத்தான் தெரிய வந்தது. மனைவி இல்லாத போதுதான் அவளுடைய அருமை தெரிந்தது. அதன்பிறகு மகளை நல்லபடியாய் வளர்த்து படிக்க வைத்து ஒரு நல்ல வரன் பார்த்து திருமணம் செய்து வைத்தேன். நான் வாழ்க்கையில் செய்த ஒரே நல்ல காரியம் இது ஒன்றுதான். நான் இந்த அரசியலை விட்டு விலக முடியாது. காரணம் இது ஒரு புதைமணல். நான் இதிலிருந்து விடுபட முடியாது என்கிற காரணத்தினால் தற்கொலை செய்து என்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன். இது நான் எடுத்த முடிவு. விசாரணை என்கிற பெயரில் யாரையும் துன்புறுத்த வேண்டாம்.
இப்படிக்கு
கஜபதி
வேல்முருகன் கடிதத்தை முழுமையாய் படித்துவிட்டு தொங்கிக் கொண்டிருந்த கஜபதியின் உடலைப்பார்த்துவிட்டு இன்ஸ்பெக்டரிடம் திரும்பினார்.
"பாடியை ஏன் கீழே இறக்கலை...! "
"நீங்க வர்றதுக்காக வெயிட் பண்ணிட்டிருந்தோம் ஸார்..... "
"மொதல்ல பாடியை இறக்குங்க ...! "
"எஸ் ஸார்..... "இன்ஸ்பெக்டர் பிரசன்னா சொல்லிவிட்டு அங்கிருந்து நகர வேல்முருகனின் பார்வை தனக்குப் பக்கத்தில் நின்றிருந்த அருளின் பக்கமாய் திரும்பியது. கேட்டார்.
"ஸார்....... கஜபதியோட தற்கொலையை உங்களால நம்ப முடியுதா...? "
"நான் நம்பறேன் மிஸ்டர் வேல்முருகன்"
"என்ன ஸார் ....... சொல்றீங்க...... சிலமணிநேரத்துக்கு முன்னாடி பெசண்ட் நகர் பீச்சில் கஜபதி நம்ம கூட பேசும்போது கூட உற்சாகமான மனநிலையில்தான் இருந்தார். அதுக்கப்புறம் அவர் தற்கொலை பண்ணிக்கொள்கிற முடிவுக்கு எப்படி போயிருக்க முடியும்...? "
"மிஸ்டர் வேல்முருகன் ...! நீங்க பீச்சிலிருந்து கிளம்பி திரிசூலத்துக்கு போன பிறகு, அடுத்த பத்து நிமிஷத்துக்குள்ளே நாங்களும் அங்கிருந்து கிளம்பிட்டோம். நான் என்னோட வீட்டுக்குப் போய் காரை போர்டிகோவில் பார்க் பண்ணிட்டிருந்த போது கஜபதி எனக்கு போன் பண்ணினார். நான் போனை அட்டெண்ட் பண்ணி என்ன விஷயம்ன்னு கேட்டேன். அதுக்கு அவர் "ஸார் எனக்கு மனசு சரியில்லை. உயிரோடு இருக்கவே பிடிக்கவில்லை. தற்கொலை பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன். இது நானாக எடுத்த முடிவு. லெட்டரும் எழுதி வெச்சிருக்கேன்னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டார்.........! "
[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]