For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னண்ணே சொல்றீங்க......? ராஜேஷ் குமாரின் பைவ் ஸ்டார் துரோகம் (19)

Google Oneindia Tamil News

-ராஜேஷ் குமார்

கஜபதி நிலை குலைந்து போனார். எழுந்து நின்று பதறினார்.

“அண்ணே எனக்கு அவனைத் தெரியுமா..... என்னண்ணே சொல்றீங்க......?”

முகில்வண்ணன் அவரை இடது கையால் அமர்த்தினார். “கஜபதி, ஏன் இப்படி பதட்டப்படறே......?” ஏதோ நீயே தப்பு பண்ணிட்ட மாதிரி புலம்பறே ......! என்னோட மாப்பிள்ளை மணிமார்பனை தாக்கி கடத்திவிட்டு போன ஆளை உனக்குத் தெரியும். ஏன்னா வாட்டர்கேன் சப்ளை பண்ற அந்தக் கம்பெனி ஓனரையும், அந்த கம்பெனியில் வேலை செய்யற ஆட்களையும் உனக்குத்தான் தெரியும்......!

rajesh kumar series five star dhrogam 19

“என்னண்ணே செல்றீங்க...... எனக்கு ஓன்றுமே புரியலை ......!

போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் இப்போது பேச்சில் குறுக்கிட்டார். “உங்களுக்குப் புரியும்படியா நான் சொல்றேன். நேற்று காலை மாப்பிள்ளை மணிமார்பனை காணோம்ன்னு எல்லோரும் தேடிகிட்டு இருக்கும்போது குடிதண்ணீர் கேன்களை விழா மேடைக்குப் பின்னாடி அடுக்கி வெச்ச “அமிர்தம் வாட்டர் சர்வீஸ்“ கம்பெனிக்கு சொந்தமான வேன் ஓண்ணு இந்த வீட்டோட பின்பக்க மெயின் கேட் வழியா வெளியே போயிருக்கு. அந்த வேனை செக் பண்ண நிறுத்தியிருக்கார் செக்யூரிட்டி வீராசாமி . ஆனா அந்த வேன் டிரைவர் வேனை நிறுத்தாமே அந்த செக்யூரிட்டிகிட்ட “இன்னும் நூறு கேன் வாட்டர் சப்ளை பண்ணணும். இப்படி நிறுத்தி நிறுத்தி சோதனை போட்டுகிட்டு இருந்தா சரியான நேரத்துல எப்படி சப்ளை பண்றதுன்னு சத்தம் போடவே செக்யூரிட்டி வேனை சோதனை போட்டாம அனுப்பிட்டார். அப்படி அனுப்பினபிறகுதான் செக்யூரிட்டிக்கு அந்த காட்சி ஞாபகத்துக்கு வந்து இருக்கு.......!

அது என்ன காட்சி என்பது போல் கஜபதி போலீஸ் கமிஷனரை பார்க்க அவர் சில விநாடிகள் மெளனம் சாதித்துவிட்டு தொடர்ந்தார்.

அந்த வேனை ஓட்டிட்டு வந்த டிரைவரின் இடது தோள் பட்டை சட்டையில் ரத்தக் கறைகள் இருந்ததை பார்த்து இருக்கார் செக்யூரிட்டி. அது அந்த சமயத்துல பெரிய விஷயமாக தெரியல. ஆனா மாப்பிள்ளை மணிமார்பனை காணோம்ன்னு எல்லோரும் தேடிகிட்டு இருந்த போதுதான் அந்த ரத்தக் கறை விஷயம் ஞாபகம் வந்து இருக்கு. உடனே செக்யூரிட்டி வீராசாமி ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி வந்து என்கிட்டே விஷயத்தைச் சொன்னார். செக்யூரிட்டி சொன்ன விபரங்களை வெச்சுப் பார்க்கும்போது மணிமார்பன் தாக்கப்பட்டு அந்த வேன் டிரைவரால் கடத்தப்பட்டு இருக்கலாம் என்கிற முடிவுக்கு வரவேண்டியிக்கிறது. உங்களுக்கு அந்த அமிர்தம் வாட்டர் சர்வீஸ் கம்பெனியோட ஓனரைத் தெரியும்தானே.....?”

கஜபதி கலங்கிப் போனவராய் தலையாட்டினார்.

“தெரியும்“

“அவரோட பேர் என்ன......?”

“அமிர்தலிங்கம்.......“

“குடிதண்ணீர் கேன் ஏற்பாடுகளை எல்லாம் இந்த விழாவுக்காக பண்ணிக் கொடுத்தது நீங்கதானே......?”

”ஆமா...... ஸார்...... ”

”மணிமார்பன் தாக்கப்பட்டு காணாமே போனதுக்கும் வாட்டர் சர்வீஸ் ஓனர் அமிர்தலிங்கத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கும்ன்னு நினைக்கிறீங்களா......?”

”நான் அப்படி நினைக்கலை ஸார்...... ஏன்னா அமிர்தலிங்கத்தை எனக்கு பல வருஷ காலமாய் தெரியும். எந்த ஓரு அரசியல் கட்சியையும் சேராதவர்... தான் உண்டு தன் தொழில் உண்டு என்று இருப்பவர். கடவுள் பக்தி ரொம்பவும் அதிகம். கோயில் விழாக்களுக்கெல்லாம் தண்ணீரை இலவசமாகவே சப்ளை பண்ணக்கூடியவர். அவர் இப்படிப்பட்ட படுபாதகமான வேலையை பண்ணியிருக்கமாட்டார்”

”ஓரு வேளை அவருக்கே தெரியாமே அந்த வேன் டிரைவர் வேறு யாருடைய பேச்சைக் கேட்டு மணிமார்பனை தாக்கி வேன்ல கடத்திட்டுப் போயிருக்கலாமோ......?”

”அப்படியிருக்கவும் வாய்ப்பு இருக்கு ஸார் .......!

”சரி..... அந்த வேன் டிரைவர் யாருன்னு உங்களுக்கு தெரியுமா கஜபதி ......?”

”தெரியாது.... அமிர்தலிங்கத்தை கேட்டா தெரியும்... ”

”ம்.... கேளுங்க..... நானோ போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கற வேறு எந்த அதிகாரியோ இதுவரைக்கும் அமிர்தலிங்கத்துக்கு போன் பண்ணியோ அல்லது நேரிடையாகவோ விசாரிக்கலை...... நீங்க போன் போட்டு பேசுங்க.... விஷயத்தை சொல்லாமே அந்த வேன் டிரைவர் யார் எப்படிப்பட்டவன் மட்டும் விசாரிங்க”

“ஸார்...... இந்த மிட் நைட்ல போன் பண்ணி பேசினா அது சரியாய் இருக்குமா ......?”

“இது மாதிரியான விஷயங்களுக்கு இதுதான் சரியான நேரம்.... ம்.... போன் பண்ணுங்க....... “

கஜபதி சில விநாடிகள் தயங்கிவிட்டு தன் செல்போனை எடுத்து அந்த அந்த அமிர்தலிங்கத்தை தொடர்பு கொண்டார். நல்ல தூக்கக் கலக்கத்தில் அவர் பேசினார். செல்போனின் ஸ்பீக்கர் ஆனில் இருந்தது.

“என்ன கஜபதி இந்த அகால வேளையில் எனக்கு போன் பண்றே...ஏதாவது மோசமான சம்பவமா.......?”

“ஆமா .....ஓரு சரியான விபரம் உன் கிட்டயிருந்து எனக்கு வேணும் . எதையும் மறைக்காமல் சொல்லணும்..... பொய் சொல்லிடாதே பிரச்சினையாயிடும்“

நீ பேசற விஷயத்தை பார்த்தா விவகாரம் பெரிசாயிருக்கும் போலிருக்கே......?”

“பெரிசுதான்...... எக்ஸ் சீப்மினிஸ்டர் முகில்வண்ணன் வீட்டு விசேஷத்துக்கு குடி நீர் கேன் சப்ளை பண்ண எந்த வேன் டிரைவரை நீ அனுப்பி வைச்சேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா......?”

“ இருக்கே....... “

“ யாரு.. “

“ நீலகண்டன் “

“ ஆள் எப்படி......?”

“ எப்படின்னா ......?”

“ பழக்கவழக்கம்தான்“

“ அவன் வேலைக்கு சேர்ந்து ஆறுமாசம்தான் ஆச்சு. நல்ல டைப். சொன்ன வேலையைப் பண்ணிட்டு போயிட்டே இருப்பான்“

“ அந்த நீலகண்டனை வேலைக்கு சேர்க்கிறதுக்கு முந்தி அவனோட பின்னணி விசாரிச்சிங்களா ......?”

“ம்.... விசாரிச்சேன்..... ஆறுமாசத்துக்கு முன்னாடி வரை ஃபஸ்ட் அண்ட் பெஸ்ட் ட்ராக் கால் டாக்ஸியில் வேலை பார்த்து சம்பள பிரச்சினையில் வெளியே வந்திருக்கிறான். கல்யாணம் இன்னும் இல்லை....... சொந்த ஊர் நாகர்கோவில். இதுவரைக்கும் அவன் மேல எந்த ஓரு ரிமார்க்கும் இல்லை.... ஆனா நீ இப்போ போன் பண்ணியிருக்கிறதைப் பார்த்தா அங்கே ஏதாவது பிரச்சினை பண்ணியிருப்பான் போல் தெரியுது“

“அமிர்தம்.....இன்னிக்கு ராத்திரி நீ டி.வி. ந்யூஸ் பார்த்தியா ...?”

”ம்.... பார்த்தேன். எக்ஸ் சி.எம்.முகில்வண்ணனோட மாப்பிள்ளை மணிமார்பனை காணாம போன நியூஸ்தானே...?”

”ஆமா..... அந்த சம்பவத்துக்கும், நீலகண்டனுக்கும் ஏதோ ஓரு வகையில் சந்தேகம் இருக்குன்னு போலீஸ் சந்தேகப்படுது....”

”எதனால அந்த சந்தேகம்...?”

”குடி நீர் கேன்களை சப்ளை பண்ணிட்டு வெளியே போகும் போது வேனை சோதனை போடக்கூடாதுன்னு நீலகண்டன் செக்யூரிட்டிகிட்டே விவாதம் பண்ணியிருக்கான்..... செக்யூரிட்டி விட்டுட்டார். ஆனா நீலகண்டனின் சட்டையில ரத்தக் கறை இருந்ததை செக்யூரிட்டி பார்த்து இருக்கார்.. இந்த விபரங்கள் எல்லாம் இப்பத்தான் தெரிய வந்தது”

”இந்த பிரச்சினையெல்லாம் வெச்சு பார்க்கும் போது மணிமார்பன் தாக்கப்பட்டு கடத்தப்பட்டதற்கும், நீலகண்டனுக்கும் சம்பந்தம் இருக்குன்னு நீ சந்தேகப்படறே இல்லையா கஜபதி...?”

“ஆமா ..... “

“மறுமுனையில் அமிர்தலிங்கம் குரலைத் தாழ்த்தினார்.

“கஜபதி.... நீ இப்ப எங்கேயிருந்து போன் பண்ணி பேசிட்டிருக்கே...?”

“ என்னோட வீட்லயிருந்துதான்“

“நான் இப்ப சொல்லப்போற விஷயத்தை கேட்டு நீ ஷாக் ஆக வேண்டாம்“

“சொல்லு .... என்ன விஷயம்“

“நான் இப்போ ராயப்பேட்டை ஜெனரல் ஹாஸ்பிடல்ல இருக்கேன்“

ஹாஸ்பிடல்ல இருக்கியா

“ஆமா ..... “

“யார்க்கு என்ன உடம்பு“

“நீலகண்டன் இப்போ உயிரோடு இல்லை....பாடி மார்ச்சுவரியில இருக்கு“

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
The 19th episode of Rajeshkumars new political thriller Five Star Dhrogam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X